சனாதன புத்தியின் எச்சம்! பிடிஆருக்காக பாய்ந்து வந்த திருமாவளவன்! அண்ணாமலை மீது விளாசல்! கடும் தாக்கு
சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் அண்ணாமலைக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடந்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி டாக்டர் திருமாவளவன் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார்.
இவரின் உடலுக்கு அரசு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது பிடிஆர் வாகனம் மீது திட்டமிட்டு செருப்பு வீசப்பட்டது.
பாஜகவினரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
பி.டி.ஆர். - அண்ணாமலை ட்விட்டரில் சொற்போர்: தமிழ்நாட்டின் சாபக்கேடு VS செருப்புக்குக்கூட சமமில்லை
விமர்சனம்
இதையடுத்து அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்த பிடிஆர் அவரை, ஆடு என்று குறிப்பிட்டார். அதோடு பிடிஆர்.. நான் ஏன் "ஆட்டை" பெயர் சொல்லி அழைப்பது இல்லை? என்றும் விளக்கம் அளித்து இருந்தார். அந்த விளக்கத்தில்,
1) இறந்து போன ராணுவ வீரரின் உடலை வைத்து அவர் பப்ளிசிட்டி தேடுகிறார்.
2) தேசிய கொடி போர்த்திய காரில் அவர் செருப்பை தூக்கி வீச பிளான் போட்டு கொடுத்தார்.
3) மோசமான பொய் சொல்கிறார்.
4) சலசலப்புகளை செய்து வருகிறார்.
இவரை போன்றவர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த சாபம். பாஜகவிற்கும் அவர் சாபம்தான் என்று பிடிஆர் அண்ணாமலையை கடுமையாக தாக்கி பேசினார்.
அண்ணாமலை பதில்
இதற்கு அண்ணாமலை அளித்த பதிலில், நீங்களும், உங்கள் கூட்டமும் உங்கள் முன்னோர்களின் இன்ஷியலை வைத்து வாழ்க்கை நடத்தும் கும்பல். உங்களால் என்னை போல சுயமாக உருவாக்கப்பட்ட, விவசாயியின் மகனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உறுப்படியாக ஏதாவது செய்து இருக்கிறீர்களா? நீங்கள்தான் தமிழ்நாட்டின், அரசியலின் சாபம், உங்களை போல நாங்கள் பெரிய பெரிய விமானங்களில் பறக்க மாட்டோம். அப்பறம்.. நீங்கள் என் செருப்பிற்கு கூட தகுதியானவர் கிடையாது என்று அண்ணாமலை கூறி இருந்தார்.
விளக்கம்
அண்ணாமலையின் இந்த ட்விட் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. நீங்கள் என் செருப்பிற்கு கூட தகுதியானவர் கிடையாது என்று அண்ணாமலை கூறியது தவறு என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர். உங்களிடம் பல 60 ஏக்கர் நிலம் உள்ளதாக நீங்களே பேட்டியில் கூறியுள்ளீர்கள். அதேபோல் உங்களின் பல கோடி சொத்துக்கள் பற்றி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த சொத்து விவர அறிக்கையில் தாக்கல் செய்துள்ளீர்கள். அப்படி இருக்கும் போது நீங்கள் ஒரு விவசாயின் மகனா என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு விளக்கம் அளித்த அண்ணாமலை.. நான் ஒன்றும் இயேசு அல்ல.. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட.. நான் திருப்பி அடிப்பேன் என்று கூறினார்.
திருமாவளவன்
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி டாக்டர் திருமாவளவன் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து ட்விட் செய்துள்ள திருமாவளவன், சமமில்லை என்பது தான் சனாதனம். அவன் சமமில்லை; அவள் சமமில்லை; அது சமமில்லை என்பதெல்லாம் காலம் காலமாகக் குருதியில் ஊறிக் கிடக்கும் சனாதனப் புத்தியின் எச்சம்!தானென்ற ஆணவத்தின் உச்சம் முதிர்ச்சியின்மையின் முற்றம். சகிப்பின்மையின் குற்றம். அச்சத்தின் பாய்ச்சல்! அறியாமையின் கூச்சல்!, என்று விமர்சித்து உள்ளார்.