பா.ரஞ்சித்துடன் என்றும் துணை நிற்பேன்.. உறுதி தந்த திருமா.. கண்கொட்டாமல் ரசித்த கனிமொழி.. பாராட்டு!
சென்னை: சென்னையில் பெரும் வரவேற்பிற்கு இடையில் மார்கழியில் மக்களிசை நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக நடைபெற்ற நிகழ்வு நேற்று பிரபல casteless collective இசைக்குழுவின் நிகழ்ச்சியோடு நிறைவு பெற்றது.
ஒரு காலத்தில் மார்கழி என்றால் சென்னையில் இருக்கும் அரங்கங்கள் முழுக்க கர்நாடக சங்கீதம் மட்டுமே ஒலிக்கும். குறைந்த அளவு மக்கள் கூட்டத்தோடு, பெரிய அளவில் பொது மக்கள் கவனம் இன்றி கர்நாடக சங்கீத சபைகள் மட்டுமே நடந்து வந்தன.
ஆனால் இயக்குனர் பா. ரஞ்சித் தொடங்கிய மார்கழியில் மக்களிசை விழா மூலம் கடந்த சில வருடங்களாக மார்கழியில் சென்னை முழுக்க பல அரங்குகள் நிரம்பி வழியும் வகையில் மக்கள் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மார்கழியில் மக்களிசை
மக்கள் இசையான பறை, நாட்டுப்புற பாடல், சென்னையின் ஆன்மாவான கானா பாடல், பழங்குடியினர் பாடல்கள், தமிழ் இண்டி (indie) பாடல்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீமில் சென்னையில் இந்த முறை மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி பெரும் வரவேற்போடு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் மைலாப்பூர், பாரிஸ் கார்னர், சென்னை ஐஐடி என்று பிரபல இடங்களில் இயக்குனர் பா. ரஞ்சித் மூலம் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

பா. ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதிலும் இந்த நிகழ்ச்சி சென்னையில் நேற்று முதல்நாள் மழை பெய்த போது கூட அரங்கம் நிறைந்த கூட்டம் நிரம்பி வழிந்தது. அன்றைய தினம் இந்த விழாவில் பழங்குடியினர் பாடல்கள் இசைக்கப்பட்டது. இதற்காக பழங்குடி மக்கள் தொலைதூரங்களில் இருந்து சென்னை வந்து இருந்தனர்.

சென்னை மழை
அத்தனை மழையிலும் அன்று அரங்கம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழா மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் சென்னையில் நடைபெற்றது. இதில் மக்களிசை மாமணி விருதுகள் வழங்கப்பட்டது. அதன்பின் பிரபல casteless collective இசைக்குழுவின் நிகழ்ச்சியோடு நிறைவு பெற்றது.

casteless collective நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன், திரை துறையில் சமரசம் இல்லாமல் இயக்குனர் பா ரஞ்சித் செயல்பட்டு வருகிறார். பண்பாட்டு தளத்தில் சாதிய ஆதிக்க அமைப்பினர் ஆதிக்கம் கொண்டு இருந்ததை நாம் அறிவோம். குறிப்பாக திரைத்துறையில் சாதிய ஆதிக்க அமைப்பினர் ஆதிக்கம் கொண்டு இருந்தனர்.

எம்பி திருமாவளவன் பா ரஞ்சித்
இன்றைக்கு அந்த தளத்தை நாம் பயன்படுத்த முடியும் என்பதை தன்னுடைய அறிவால், ஆற்றலால், துணிவால் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித். துணிவாக அவர் காய்களை நகர்த்தி வருகிறார். மக்கள் இசையை, மக்கள் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை அவர் செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு விசிக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் குறிப்பிட்டார்.
Recommended Video

கனிமொழி ரஞ்சித்
இந்த casteless collective இசைக்குழுவின் நிகழ்ச்சியை கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டு இருந்த கனிமொழி, நிகழ்ச்சிக்கு பின் இயக்குனர் பா. ரஞ்சித்தை பாராட்டி பேசினார். அதில், இந்த கலைகள் அடங்கமறு என்று சொல்லக்கூடிய கலைகள். நம்முடைய போராட்டத்தை சொல்ல கூடிய கலைகள். நம்முடைய வாழ்க்கையை, ஒவ்வொரு நாளும் நாம் தாண்டி வர வேண்டிய போராட்டத்தை, கண்ணீரை, ரத்தத்தை, கஷ்டங்களை சொல்ல கூடிய கலைகள். இந்த கலைகளை மேடை ஏற்றியதற்கு இயக்குனர் பா. ரஞ்சித்திற்கு நன்றி என்று கனிமொழி குறிப்பிட்டு இருந்தார்.











Click it and Unblock the Notifications