"நாங்க இல்லாம ஜெயிக்க முடியாதுன்னு ஸ்டாலினுக்கு தெரியும்" விசிக சங்கத்தமிழன் பரபர பேட்டி! Exclusive
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து விசிக மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். ராமதாஸ் வயது ஆக ஆக பக்குவத்தை இழந்து வருகிறார் என விமர்சித்துள்ளார் சங்கத்தமிழன்.
அண்மையில் திண்டிவனம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸின் 86வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அப்போது பேசிய ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருந்தார். ஏன் உங்களது அப்பா வீட்டுச் சொத்திலா நான் 10.5 சதவீதம் கேட்கிறேன்? இது எங்கள் நாடு, இது எங்கள் பூமி. உனக்கு இங்கே என்ன வேலை? உன்னிடம் போய் நான் 10.5 சதவீதம் கேட்க வேண்டுமா? என கொந்தளித்துப் பேசியிருந்தார்.

உன்னை கோட்டையில் சந்திக்க வேண்டுமா? எனக்கு அவமானமாக இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை உன்னிடம் கேட்டால்..நீ மத்திய அரசை கை காட்டுகிறாய். அதற்கு எதுக்கு முதல்வர்? ஏதோ நடக்கப் போகிறது; நடத்திக் காட்டப் போகிறோம். அண்டம் கிடுகிடுங்க நடக்கப் போகிறது எனக் கூறியிருந்தார். இந்நிலையில், விசிக மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி இங்கே..
கேள்வி: நான் உன்னை சந்திக்க கோட்டைக்கு வரவேண்டுமா, உன்னை சந்தித்து 10.5% இட ஒதுக்கீடு கேட்க வேண்டுமா? எனக்கு அவமானமாக இருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசி இருப்பது முதல்வரை இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
சங்கத்தமிழன்: வயதாக வயதாக மனிதர்கள் பக்குவமானவர்களாக மாறுவது வழக்கம். ஆனால், இந்த இயங்கியல் விதிகளுக்கே நேர் எதிராக இருக்கிறார் ராமதாஸ். ஆரம்ப காலகட்டத்தில் அவர் சமூக நீதிப் போராளி. அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தார். ஆனால், இன்றைக்கு பல இடங்களில் டெபாசிட் காலி. வாயை அடக்க வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், "அண்டம் கிடுகிடுங்க ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்கிறார். தமிழக முதல்வரை பார்த்து, உங்களை சந்திப்பதற்கே கேவலமாக இருக்கிறது என்கிறார்.
ராமதாஸ், தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை சென்று பார்த்தார். இட ஒதுக்கீடு கோரிக்கை வெளியில் சொல்வதுதான். ஆனால், கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கத்தான் போனார். விசிகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு பாமகவை சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். ஆனால் முதல்வர் ஸ்டாலின், எங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை சார்ந்த கூட்டணியாக இருக்கிறது என தெளிவாக சொல்லிவிட்டார்.
திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு விசிக ஒரு முக்கிய காரணம். நாங்கள் இல்லை என்றால் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியாது. இதை எங்கள் தலைவர் பக்குவம் கருதி வெளிப்படையாகச் சொல்ல மாட்டார். ஆனால் எங்களுக்கு அந்த நிர்ப்பந்தம் இல்லை. நாங்கள் இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும்.
விடிய விடிய பேசி: அதன் பிறகு தான் அதிமுகவிடம் விடிய விடிய பேசினார். ஆனால், காலையில் பாஜகவுடன் சென்று கூட்டணி வைத்துவிட்டார். பாமக திசைமாறிய பறவை ஆனதால் யாரும் நம்பவில்லை. அதனால் பல இடங்களில் பாமகவுக்கு யாரும் ஓட்டு போடவில்லை. அந்த கோபத்தில் இளைஞர்களிடம் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
கூட்டணியில் சேர்க்க மறுப்பதால், திமுக மீது கோபப்படுகிறார் ராமதாஸ். பாமகவை திமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள், நாங்களே கூட்டணியில் சேர்த்து வைப்போம். அன்புமணியிடம் இருந்து தலைவர் பதவியை பறித்து சௌமியா அன்புமணியிடம் கொடுங்கள். அவர் எங்கும் சாதி வெறியைத் தூண்டவில்லை. அவர் பாமக தலைவரானால், நாங்களே பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications