ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக விசிக சீனியர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன், பகலவன் போர்க்கொடி!
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைக்கும் விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, சட்டசபை குழுத் தலைவர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ, மாநில செய்தித் தொடர்பாளர் கு.கா. பகலவன் ஆகியோர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனையடுத்து ஆதவ் அர்ஜூனாவை நீக்குவது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், ஆலோசனை நடத்துவதாக கூறியுள்ளார்.
திமுகவால் தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்க முடியாது; ஆந்திராவைப் போல தமிழகத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும்; விசிகவால்தான் திமுக வென்றது; 2026 தேர்தலில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பது எல்லாம் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேட்டிகளில் கூறியவைதான். அவரது இந்த இடைவிடாத பேட்டிகள் திமுகவினரை கடுமையாக ஆத்திரமடைய வைத்துள்ளது.

திமுகவில் மட்டுமல்ல விசிக மூத்த தலைவர்கள் பலரையும் ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேட்டிகள் கொந்தளிக்க வைத்துள்ளன. விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி கூறுகையில், திமுக- விசிக கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல. அது ஒரு கொள்கைக் கூட்டணி. விசிக இல்லை என்றால் வடமாவட்டங்களில் திமுக தேர்தலில் வெல்ல முடியாது என்ற ஆதவ் அர்ஜூனாவின் கருத்து உண்மைக்கு மாறானது மட்டுமல்ல.. அரசியல் முதிர்ச்சியற்றது என்றார்.
விசிகவின் சட்டசபை குழுத் தலைவர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ, உயிர் கரு வளர்ந்து குஞ்சு கண் விழிக்கும் போது முட்டை உடைத்தெறியப்படுவது இயற்கைதான். ஆனால் ஒருநாள் முன்னதாகவோ, ஒருநாள் பின்னதாகவோ முட்டை உடைபட்டால் எல்லாம் பாழாகிவிடும். காலத்தின் அழைப்பிற்காக காத்திருப்போம். தாய் கோழியின் சமிக்ஞை புரிந்து கொண்டு களமாடுவோம் என கூறியுள்ளார்.
விசிக மாநில செய்தித் தொடர்பாளர் கு.கா.பகலவன் கூறுகையில், திருமாவளவன் தலைமையில் லட்சக்கணக்கான தொண்டர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் 4 சட்டசபை தொகுதிகளிலும் 2 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்தது. வேறு எந்த ஒரு நிறுவனத்தாலும் எந்த தனி மனித முயற்சியாலும் விசிக வெற்றி பெறவில்லை. ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விசிக வெற்றி பெற்று அங்கீகாரம் பெற்றதைப் போல போலியான தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார் ஆதவ் அர்ஜூன். தலைமை எடுக்கும் முடிவுகளை அவர்தான் களத்தில் சாத்தியமாக்கினார் என்கிற வாதம் அபத்தமானது.












Click it and Unblock the Notifications