எந்த நேரத்தில் என்ன பேச்சு.. சந்தேகமின்றி “சங்கிகளின் கைக்கூலிதான்”.. கொதித்து எழுந்த விக்ரமன்!
சென்னை: அரியானாவில் இந்தியாவில் வீடுகள் கடைகள் கொளுத்தப்பட்டு பள்ளிவாசல் எரிக்கப்பட்டு இமாம் கொல்லப்பட்டு உள்ள நேரத்தில் அவர்களை சாத்தானின் பிள்ளைகள் என்று யார் சொன்னாலும் அவர்கள் சங்கிகளின் கைகூலிகள் என்பதில் சந்தேகம் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. சிறுபான்மை சமூகங்களாக முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் அவர் அவமதித்துவிட்டதாக கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

சீமான் தனது உரையில், "இஸ்லாம், கிறிஸ்துவத்தை ஏற்றவர்களை தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்து வருகிறோம். ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. தேவரே வாரீர் வாரீர் என்று தேவாலயத்தில் பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து உள்ளார்கள்.
இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரும் பொறுப்பு ஏற்க வேண்டியது முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும்தான். பல ஆண்டுகளாக திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் 18 விழுக்காடு வாக்குகளை தொடர்ந்து போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்." என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில், "இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்", பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம். இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
சீமானின் பேச்சை கண்டித்தே ராஜ்கிரண் இவ்வாறு பதிவிட்டு இருப்பதாக பலரும் கருத்திட்டனர். இந்த நிலையில் இன்று சீமானிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், "என்றைக்காவது இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அநீதிக்கு எதிராக போராடி உள்ளார்களா? இஸ்லாமியர்களை அவமதித்ததாக நான் கூறி மன்னிப்பு கேட்டுவிட்டால் எனக்கு அவர்கள் ஓட்டு போடுவார்களா? நடிகர் ராஜ்கிரண் இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் கலந்துகொண்டு உள்ளார்? என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் விக்ரமன், "அரியானாவில் இசுலாமியர்களின் வீடுகள், கடைகள் கொளுத்தப்படுகின்றன. பள்ளிவாசல் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டு இமாம் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இசுலாமியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறி வருகிறார்கள். மணிப்பூரின் இனப்படுகொலையை மறைக்க மதவெறியை தூண்டும் வேலையை திட்டமிட்டு முடுக்கிவிட்டுள்ளது பாஜக.
இந்த தருணத்தில் இசுலாமியர்களை சாத்தானின் பிள்ளைகள் என யார் சொன்னாலும் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி சங்கிகளின் கைக்கூலி தான். என்று பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு பதிவில் அவர் தெரிவித்து உள்ளதாவது, "புரட்சியாளர் சரியாக சொன்னார். ஆர்.எஸ்.எஸ். ஆபத்தான அமைப்பு என்று. இந்தியாவை பாதுகாக்க அதையும் அதன் துணை அமைப்புகளான விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தளையும் தடை செய்ய வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications