எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த எடப்பாடி.. மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - திருமாவளவன்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள், தொகுபி பங்கீடு உள்ளிட்டவற்றால் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது திமுக கூட்டணியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள திருமாவளவன், எடப்பாடியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று சொல்லி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பாஜகவை எதிர்க்க தயங்கும் விஜய் குறித்தும் அவர் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், "மோடியின் கையை உயர்த்தி பிடிக்கிற ஜாதிய இந்து அடையாளமுள்ள தலைவர்களையும், எடப்பாடி பழனிசாமியையும் கேட்கிறேன். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்றால் அதன் பொருள் என்ன. பாஜகவின் ஆட்சி மலரும் என்று தானே பொருள். அது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா.

பாஜக ஆட்சி என்று தான் பொருள்
திமுக தலைமையிலான கூட்டணியை நாங்கள் திமுக கூட்டணி என்போம். நீங்கள் அதிமுக தலைமையிலான கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி என்கிறீர்கள். உங்களால் அதை அதிமுக கூட்டணி என்று கூட சொல்ல முடியாதளவுக்கு பலவீனப்பட்டுள்ளீர்கள். நாளைக்கு அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது பாஜக ஆட்சிக்கு வந்ததாக தான் பொருள். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ் ஆட்சிக்கு வந்தது என்றுதான் பொருள்.
ஆர்எஸ்எஸ் ஆட்சிக்கு வந்தால் ஆரியர்கள் வந்துவிட்டனர் என்றுதான் பொருள். ஆரியர்கள் ஆட்சிக்கு வந்தால் பெரியார் வீழ்த்த நினைத்த சனாதனம் மீண்டும் வந்துவிட்டது என்று பொருள். இதனால் தான் திருமாவளவன் திமுகவுடன் உடும்பு பிடியுடன் கூட்டணியில் உள்ளனர். ஆதாயங்களுக்காக திமுகவுடன் நாங்கள் இருப்பதாக சில மூடர்கள் கூறுகிறார்கள். எவன் ஒருவன் பாஜகவை எதிர்க்க தயங்குகிறானோ, அவன் அவர்களால் உருவாக்கப்பட்டவன்.
எடப்பாடி மீது காட்டம்
எவன் மோடியை அரசை விமர்சிக்க தயங்குகிறானோ அவன் அவர்களால் வளர்க்கப்பட்டவன் என்று பொருள். உங்களுக்கு ஏன் தயக்கம். திமுக ஆட்சியை விமர்சிக்கும் மோடி, 11 வருடங்களில் சாதித்தது என்ன. உலக சந்தையில் இந்திய ரூபாய் இவ்வளவு வீழ்ச்சியடைந்ததற்கு யார் பொறுப்பு. தங்கம் விலை சவரன் ரூ.1.25 லட்சம் சென்றதற்கு யார் காரணம். அதானிக்கும், அம்பானிக்கும் இந்தியாவை விற்று கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் கார்ப்பரேட், இன்னொரு பக்கம் சனாதனம். இதுதான் பாஜகவின் ஆட்சி.
அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக எடப்பாடி துணை போகிறார். தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் எடப்பாடியை மன்னிக்க மாட்டார்கள். அவர் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இல்லை. தன் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே செயல்படுகிறார். பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா சொன்னாரா இல்லையா. பிறகு எதற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்.
விஜய்க்கு பயம்
பாஜக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வராத கட்சிகளை எல்லாம் மறைமுகமாக மிரட்டுகிறது. அப்படி தவெக தலைவர் விஜய்க்கும் பாஜக மறைமுகமாக அச்சுறுத்தி வருகிறார்கள். விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு அடிபணிந்து விஜய் அங்கு சென்றால் அவரின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும். பாஜக, மோடியை வெளிப்படையாக எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார். அவரை எது தடுக்கிறது என்கிற கேள்வி எழுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications