திமுக கூட்டணிக்கு வேட்டு- விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம்?திருமாவளவன் சொன்ன பதில் இது!
கோவை: திமுகவுடான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ஆதவ் அர்ஜூனாவின் பேட்டியால் திமுகவுடான உறவில் எந்த விரிசலும் ஏற்படாது என்றும் தொல்.திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம் பெற்று சட்டசபை, லோக்சபா தேர்தல்களை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்களைப் பெற்றிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஆனால் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காத அண்ணா திமுக பக்கம் விசிக தாவக் கூடும் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை அழைப்பு விடுத்தது பெரும் சர்ச்சையானது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை அழைப்பது எப்படி சரி என்பது விவாதமானது. இதனைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற அடுத்த முழக்கத்தை திருமாவளவன் முன்வைக்க திமுக கூட்டணியில் சலசலப்பு பூதாகரமானது. இந்த பின்னணியில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் திருமாவளவனின் சலசலப்பு குரல் சட்டென அடங்கியது.
ஆனால் கடந்த சில நாட்களாக விசிகவின் துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா என்பவர் தொடர்ந்து டிவி ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் திமுகவை கடுமையாக விமர்சிப்பதும் அதிமுகவை உயர்வாக பேசுவதுமான போக்கையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா? விசிகவால் திமுக ஜெயிக்கிறது என்றெல்லாம் பேசியிருந்தார். அதிகாரப் பகிர்வு, துணை முதல்வர் பதவி குறித்து ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார்.
ஆனால் ஆதவ் அர்ஜூனாவின் பேட்டிக்கு விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஆதவ் அர்ஜூனாவின் பேட்டி, திமுக- விசிக கூட்டணியை உடைக்கும் சதித் திட்டத்தை செயல்படுத்துகிறது; விசிகவை அதிமுக கூட்டணியில் சேர்க்கும் முயற்சிதான்; விசிக என்ற கட்சியையே இல்லாமல், செய்ய துடிக்கும் பாஜகவின் சதி என்கிற விமர்சனங்களும் உருவானது.
இந்த நிலையில்தான் கோவையில் இன்று செய்தியாளர்களை இன்று சந்தித்தார் திருமாவளவன். அப்போது, திமுகவுடானான கூட்டணியில் எந்த சலசலப்பும் விரிசலும் இல்லை. ஆதவ் அர்ஜூனா கொடுத்த பேட்டியால் திமுகவுடான கூட்டணிக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றார்.
அப்போது, ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications