"இனியும் ஆளுநருக்காக காத்திருக்கணுமா?" திமுகவுக்கு கேள்வி எழுப்பும் விசிகவின் வன்னி அரசு
திமுக அரசுக்கு விசிகவின் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: மாநில உரிமைகளை நிலைநாட்ட, திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எழுவர் விடுதலை நடைமுறைப்படுத்த வேண்டும்... இனியும் ஆளுநருக்காக காத்திருக்க வேண்டுமா?" என்று விசிகவின் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரில் ஒருவர் நளினி ஆவார்..
இந்த 7 பேரையும் விடுதலை செய்ய 2018, செப். 9ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது..

பதில் மனு
ஆனால் ஆளுநர் இது சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் உள்ளதாவது:

தீர்மானம்
"தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க தகுதியானவர் என சொல்லி, ஆளுநர் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும்... சுப்ரீம் கோர்ட் நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும்.. உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று மனுவில் கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.

விசாரணை
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம்கோர்ட்டில் பேரறிவாளர் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இதேபோல, முன்விடுதலை கோரி இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவுக்கும் 3 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசிக வன்னி அரசு
முன்னதாக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த அந்த மனுவில் உள்ள காரணங்களை குறிப்பிட்டு, விசிகவின் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், "முப்பதாண்டுகளாக சிறையில் வாடுகிறார் சகோதரி நளினி. விடுதலைக்காற்றை சுவாசிக்க காத்திருக்கிறார். வெளிச்சக்கீற்றை காண எதிர்பார்த்திருக்கிறார். மாநில உரிமைகளை நிலைநாட்ட #திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எழுவர் விடுதலை நடைமுறைப்படுத்த வேண்டும். இனியும் ஆளுநருக்காக காத்திருக்க வேண்டுமா?" என்றும் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

கூட்டணி
சரியான கேள்வி என்று பலரும் இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் சிலர், திமுக சரியான திசையிலேயே பயணிப்பதாகவும், இந்த விஷயத்தை நேர்த்தியாக கையாண்டு வருவதாகவும் தங்கள் கமெண்ட்களை ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.. மேலுர் சிலர், கூட்டணியில் இருந்தாலும், தவறை சுட்டிக்காட்டி வலியுறுத்துவது சிறந்த அணுகுமுறை என்றும் விசிகவை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications