திமுக- விசிக கூட்டணி உடையுமோ? இலவு காத்த கிளிகளுக்கு அறிவாலயத்தில் திருமாவளவன் தந்த பொளேர் பதில்!
சென்னை: திமுக- விடுதலைச் சிறுத்தைகள் இடையேயான கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை; எந்த நெருடலும் இல்லை என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி திட்டவட்டமாக தெரிவித்தார். மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தல் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பில் எதுவும் பேசவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எங்களது கருத்து. அவ்வளவுதான். 1999-ம் ஆண்டு முதல் பேசிவருகிற கருத்து. அது தற்போது, சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்படுகிறது. அந்த கோரிக்கையை நாங்கள் எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறோம்.. பேசிக் கொண்டே இருப்போம். எந்த நேரத்தில் எப்போது எந்தக் கருத்தை எந்த நிலைப்பாட்டை எந்த கொள்கையை வலுவாக பேசவேண்டுமோ அதை அப்போது பேசுவோம்.

தேர்தலுக்கு தொடர்பு இல்லை: விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் நடத்துவது தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான கைம்பெண்கள் கண்ணீர் சிந்த வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.. அவர்களின் கோரிக்கையைத்தான் நாங்கள் முன்னிறுத்தி மாநாட்டை நடத்துகிறோம். இதனை திசைதிருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்தும் இணைத்தும் பார்க்க வேண்டாம்.

திமுக பங்கேற்பு: திமுகவுக்கு நாங்கள் நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. நாங்கள் பேசிய விவரங்களில் இருந்து உங்க கருத்தும் எங்க கருத்தும் ஒன்றுதான்.. உங்க மாநாட்டில் எங்கள் தரப்பில் 2 பேர் பங்கேற்பார்கள் என கூறியிருக்கிறார். இந்த கருத்தில் உடன்படுகிறவர்கள் எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எந்த தடையும் தயக்கமும் இல்லை.

திமுகவுடன் விரிசல், நெருடல் இல்லை: திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை; எந்த நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதை முன்னிறுத்துகிறோம். தேர்தலுக்கு இன்னமும் 15 மாதங்கள் இருக்கின்றன. திமுக இந்த மாநாட்டில் பங்கேற்பதாக கூறியிருக்கிறது. இதற்கு பின் அதிமுக நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியாது. இது எல்லோருக்குமான பிரச்சனை. இது ஒரு கட்சிக்கான பிரச்சனை இல்லை. ஒரு கூட்டணிக்கான பிரச்சனை இல்லை. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications