கண்டா வரச் சொல்லுங்க.. ஆளூர் ஷாநவாஸுக்கு கண்டிப்பா சீட் கொடுங்க.. அதிகரிக்கும் ஆதரவுக் குரல்கள்!
சென்னை: இந்த சட்டசபைத் தேர்தல் வித்தியாசமான தேர்தலாக உள்ளது. இந்தெந்த வேட்பாளர்கள் என கட்சி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே சமூகவலைதளங்களில் இவர் வந்தா நல்லாயிருக்கும் என ஆதரவுக் குரல்கள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த கட்சிகள் தொகுதி பங்கீட்டுக்கு முன்பே தொண்டர்களிடம் விருப்ப மனுவை பெற்றுக் கொண்டன. பொதுவாக விருப்ப மனு அளித்த அனைவரிடமும் நேர்காணலை கட்சிகள் நடத்தும். அந்த குறிப்பிட்ட வேட்பாளருக்கு அவர் கேட்கும் தொகுதியில் உள்ள செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு, பின்னணி, எந்த புகாருமின்மை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள்
ஆனால் இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானது என்றே சொல்லலாம். இந்த வேட்பாளர்களுக்கு சீட் தந்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்களே தங்கள் அபிப்ராயத்தை வைரலாக்கி வருகிறார்கள். அவ்வாறு அவர்கள் வைரலாக்கும் நபர் ஆளூர் ஷா நவாஸ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆவார்.

அரசியல்வாதி
38 வயதாகும் இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். சிறந்த அரசியல்வாதி, சமூக ஆர்வலர், எழுத்தாளர், இலக்கியவாதி, நல்ல சொற்பொழிவாளர், எல்லாவற்றுக்கும் மேல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். யாராக இருந்தாலும் தனது கருத்தை இடித்துரைப்பதில் தயக்கம் காட்டாதவர். பொதுவாக அரசியலுக்கு தேவை மனிதாபிமானம், ஆளுமை திறன், அனுபவம் என்றாலும், துணிச்சல் என்பது மிகவும் அவசியமானதொன்று.

பொம்மை
அத்தகைய துணிச்சலை பெற்றவர்தான் ஆளூர் ஷாநவாஸ். மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அவை மக்களுக்கு தீங்கு என்றால் அதை தட்டிக் கேட்பதில் வல்லவர். புள்ளி விவரங்களுடன் தன் கருத்துகளை எடுத்துரைப்பார். என்னதான் சிறந்த நிர்வாகத் திறமையிருந்தாலும் தவறை தட்டிக் கேட்கும் துணிச்சல் இல்லாவிட்டால் வெறும் பொம்மை போல் செயல்பட வேண்டியதுதான்.

நெட்டிசன்கள்
இவரது துணிச்சலையும் ஆழ்ந்த கருத்துகளையும் பார்த்த நெட்டிசன்கள் விடுதலை சிறுத்தைகள் சார்பில் இவர் களமிறங்கி சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள். இவரது குரல் சட்டசபையில் ஓங்கி ஒலிக்க வேண்டும். தமிழக மக்களின் உரிமைகளை பெற்று தர வேண்டும் என்கிறார்கள். அவரால் கோடிக் கோடியாக தேர்தலில் கொட்டி செலவழிக்க முடியாது. ஆனாலும் சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்காகவே ஷாநவாஸுக்காக நிதி திரட்டி தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் சொல்கிறார்கள்.

ரவிக்குமார்
தொல் திருமாவளவனும் ரவிக்குமாரும் எம்பியாகிவிட்டதால் ஆளூர் ஷாநவாஸுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். சட்டசபைக்கு இளைஞர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும் என்ற குரல் இணையத்தில் ஓங்கி ஒலிக்கிறது. ஷாநவாஸ் போன்ற திறமைசாலிகள் வந்தால் நல்லது என்பதே அனைவருடைய கருத்தாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.












Click it and Unblock the Notifications