கோயம்பேடு போறீங்களா.. பீன்ஸ் ரூ.120க்கு விற்குது.. தலைசுற்ற வைக்கும் காய்கறிகள் விலை
சென்னை: கடும் வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக காய்கறிகளின் விலை சென்னை கோயம்பேட்டில் உச்சகட்டமாக இருப்பதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னையில் கோடைக்காலம் துவங்கியது முதலே காய்கறிகளின் விலை கணிசமாகஅதிகரித்து வந்தது. தற்போது ஞாயிற்றுக்கிழமையான இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120க்கு விற்கப்படுகிறது. அவரைக்காய் கிலோ ரூ.125 வரை விற்கிறது. இஞ்சி ரூ.120 வரை விற்பனையாகிறது.
கேரட் விலை கிலோ ரூ.60க்கும், தக்காளி விலை ரூ.40க்கும் விற்பனையாகிறது. கடந்த மாதம் சராசரியாக அனைத்து காய்கறிகளுமே 30 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது.
கடந்த மாதம் 20 ரூபாயாக இருந்த தக்காளி விலை இன்று 40 முதல் 50 வரை விற்பனையாகிறது. எலுமிச்சை பழம் விலையும் மிகவும் உயர்ந்து காணப்படுகிறது.
இதனால் நடுத்தர வர்க்கத்தினர், காய்கறிகள் வாங்கி சமையல் செய்வதற்கும் அதிகப்படியாக தொகையினை மாதந்திர பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர்.