பாஜகவில் வெடித்த பஞ்சாயத்து.. முக்கிய நிர்வாகிகள் திடீர் விலகல்! கட்சி தலைமை முடிவுக்கு எதிர்ப்பு!
சென்னை: வேலூர் மாவட்ட பாஜக தலைவர், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பாஜ்கவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். வேலூர் மாவட்ட பாஜகவில் புதிய தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட தசரதன் என்பவருக்கு புதிதாக பொறுப்பு வழங்கியதால் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாநில தலைமையின் முடிவில் உடன்பாடு இல்லாததால், மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாபு, ஜெகநாதன், மகேஷ்குமார், மாவட்ட பொருளாளர் தீபக் ஆகியோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தமிழக பாஜகவில் மாநில மற்றும் மாவட்ட பாஜக நிர்வாகிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் தற்போது நிர்வாகிகளை மாற்றி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் – சசிகுமார்
நெல்லை – முத்து பலவேசம்
தென்காசி – ஆனந்தன் அய்யாசாமி
சிவகங்கை – பாண்டித்துரை
நாமக்கல் மேற்கு – ராஜேஷ் குமார்
நாமக்கல் கிழக்கு – சரவணன்
விருதுநகர் கிழக்கு – பென்டகன் ஜி பாண்டுரங்கன்
திண்டுக்கல் கிழக்கு – முத்துராமலிங்கம்
திருப்பத்தூர் – எம் தண்டாயுதபாணி
கடலூர் மேற்கு – க.தமிழழகன்
கடலூர் கிழக்கு – கிருஷ்ணமூர்த்தி
நீலகிரி – தர்மன்
மயிலாடுதுறை – நாஞ்சில் கே.பாலு
அரியலூர்- டாக்டர்.பரமேஸ்வரி
காஞ்சிபுரம் – ஜெகதீசன்
செங்கல்பட்டு தெற்கு – மருத்துவர் பிரவீன் குமார்
கன்னியாகுமரி மேற்கு – ஆர் டி சுரேஷ்
கன்னியாகுமரி கிழக்கு – கோப்பு குமார்
திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்
தேனி -ராஜபாண்டியன்
திருச்சி – ஒண்டிமுத்து
ஆகியோர் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் இன்று நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் பதவியேற்பு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட பாஜக தலைவராக தசரதன் என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, வேலூர் மாவட்ட தற்போதைய பாஜக தலைவர் மனோகரன், வேலூர் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாபு, ஜெகநாதன், மகேஷ்குமார், மாவட்ட பொருளாளர் தீபக் ஆகியோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனால் வேலூர் மாவட்ட பாஜகவில் சலசலப்பு ஏற்பட்ட்டுள்ளது.
திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவராக தயாசங்கரும், பொதுச் செயலராக வேல் ஆறுமுகமும், தெற்கு மாவட்ட தலைவராக தமிழ்ச்செல்வனும் பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மீண்டும் இந்த பொறுப்புகள் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் அதிருப்தி அடைந்த மாவட்ட தலைவர் தயாசங்கர், “இத்துடன் பாஜகவில் எனது அரசியல் பயணம் முடிவடைகிறது. என்னுடன் இதுவரை பயணித்த சகோதர சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல, நெல்லை வடக்கு மாவட்ட பொதுச் செயலர் வேல் ஆறுமுகம், கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜகவில் புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” என தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications