தமிழகத்திற்குள் இனி இவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; அரசுக்கு வேல்முருகன் அலர்ட்!
சென்னை: ஓமிக்ரான் கொரோனோ வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவிவரும் சூழலில், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச விமான போக்குவரத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கப் போவதாக அறிவித்துள்ளதை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை.. தந்தையை இழந்து தவிக்கும் 3 குந்தைகள்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கொரோனா வைரஸ்
கொரோனா பாதிப்பில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி, உலக நாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்கள், கடந்த சில மாதங்கள் தான் பணிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். ஒன்றிய அரசின் மோசமான பொருளாதார கொள்கையாலும், கொரோனாவின் பாதிப்பாலும் அதளபாதாளத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க துவைங்கியுள்ளது.
தென்னாப்ரிக்கா
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வரும் விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.
அதிர்ச்சி
அதே நேரத்தில், டிசம்பர் 15ஆம் தேதி முதல், சர்வதேச விமான போக்குவரத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் 57 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படும் நிலையில், ஓமிக்ரான் வகை கொரோனா இந்தியாவில் பரவினால் அதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஒமிக்ரான் பரவல்
எனவே, ஓமிக்ரான் கொரோனா பரவலை தடுப்பது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய அவரச கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நோய்த் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.