மினி கிளினிக்களுக்கு அவுட் சோர்சிங் முறையில் பணி நியமனம்... வேல்முருகன் கடும் கண்டனம்..!
சென்னை: தமிழக அரசால் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டவே அரசு வழிவகை செய்து கொடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அரசுக்கு கண்டனம்
தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்கிற்கு, அவுட் சோர்சிங் முறையில் செவிலியர்களை நியமனம் செய்ய அதிமுக அரசு முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அதாவது, 2000 மினி கிளினிக்குகளில் செவிலியர்களுக்கான பணியிடங்கள், தனியார் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
வேல்முருகன் புகார்
தற்போது, மினி கிளினிக்கிற்கு தனியார் நிறுவனத்தின் மூலம் செவிலியர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியிடங்களுக்கு, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, தகுதியற்றவர்கள் நியமிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த அவுட் சோர்சிங் முறை என்பது முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டவே கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
உயர்நீதிமன்ற தீர்ப்பு
இந்த பணியிடங்கள் மார்ச் 2021 வரை என்று அரசாணை மூலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மினி கிளினிக் என்பது தேர்தலுக்காக, வாக்கு அரசியலுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை நமக்கு உணர்த்துகிறது. அரசு மருத்துவமனைகளில், அவுட் சோர்சிங் முறையில் மருத்துவர்கள் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவை அதிமுக அரசுக்கு இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வேண்டுகோள்
எனவே, மினி கிளினிக்குகளில் தனியார் நிறுவனத்தின் மூலம் செவிலியர்களை நியமிக்கும் நடவடிக்கையை, அதிமுக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி, அதிமுக அரசு அறிவித்தபடி 2,000 மினி கிளினிக்குகளில், புதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவமனைப் பணியாளர்களையும், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் உடனடியாக நியமிக்க வேண்டும்.