மசோதாவை திருப்பியனுப்பும் ஆளுநரை தமிழ்நாட்டிலிருந்தே திருப்பி அனுப்பணும்! வேல்முருகன் போர்க்குரல்!
தமிழ்நாட்டிலிருந்து ஆளுநரை திருப்பி அனுப்பச் சொல்லும் வேல்முருகன்.
சென்னை: தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலிருந்து ஆளுநரை திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் போர்க்குரல் உயர்த்தியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதற்கு கடிவாளம் போடும் வகையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டம் கடந்த அக்டோபர் 18-ஆம் நாள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து நேற்று மீண்டும் திருப்பி அனுப்பியிருப்பது அரசியல் கட்சித் தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இதனிடையே ஆளுநரை தமிழ்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பக் கோரி வேல்முருகன் விடுத்துள்ள பதிவு வருமாறு; ''தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இச்செயல் மூலம் ஆளுநருக்கும் அவரைப் பின்னிருந்து இயக்கும் பாஜக,ஆர்எஸ்எஸ் கும்பலுக்கும் தமிழ்நாட்டின் நலனை பற்றியோ, இங்கு தினமும் செத்து மடியும் தமிழர்களைப் பற்றியோ எந்த கவலையும் இல்லை என்பதை மீண்டும் புலப்படுகிறது.
தமிழ்நாடு அரசு இதற்கு மாற்று வழிகளை ஆராய்வதோடு தமிழர் விரோத ஆளுநரை திருப்பியனுப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications