LIC -யை தனியார்மயமாக்க ஒன்றிய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது... வேல்முருகன் சாடல்..!
சென்னை: கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது எனக் கூறியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
மேலும், காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது;

ஒன்றிய அரசு
பொதுத்துறையில் இயங்கி வரும் நான்கு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பொதுக்காப்பீட்டு வர்த்தகம் திருத்தச் சட்ட முன்முடிவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறியும், விவாதமின்றியும் நிறைவேற்ற உள்ளது ஒன்றிய அரசு.

எல்.ஐ.சி.
அதாவது, இந்த மசோதா என்பது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் 51 சதவீத பங்குகளை ஒன்றிய அரசு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்கிறது. இதன் மூலம் 100 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கிறது. இந்த நிதியாண்டில் எல்.ஐ.சியின் பங்குகளை விற்று நிதிதிரட்டப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்ததன் படி, இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தாரை வார்ப்பு
நாட்டின் ஒட்டுமொத்த அரசின் நிதி தேவையை ஒப்பீட்டளவில் பூர்த்தி செய்துவரும் செல்வ வளம் நிறைந்த எல்.ஐ.சி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. ஒன்றிய அரசின் இத்தகைய மோசமான பொருளாதார நடவடிக்கையால், ஆண்டுதோறும் எல்.ஐ.சி வழங்கி வரும் பல்லாயிரம் கோடி வருவாயை இழக்கக்கூடிய நிலை ஏற்படும். ஊழியர்களின் வேலை மற்றும் இடஒதுக்கீடு பறிபோகும். பொதுமக்கள் எல்.ஐ.சி-யில் கட்டியிருக்கும் காப்புத் தொகைக்கு எந்த ஒரு அரசு உத்தரவாதமும் கிடையாது.

பொதுக்காப்பீடு
எனவே, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.காப்பீட்டு நிறுவனங்களை தனிமயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து போராடி வரும் காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு, நாட்டு மக்கள் மற்றும் எல்.ஐ.சி பணியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எல்.ஐ.சி-யை தனியார்மயமாக்க ஒன்றிய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications