கடலூர் எம்.பி. சீட்டுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறி! திமுகவிடம் முட்டிமோதும் வேல்முருகன்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 1 தொகுதியிலாவது களம் கண்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள வேல்முருகன், கடலூர் மக்களவைத் தொகுதியை திமுகவிடம் எதிர்பார்க்கிறார்.
கடந்த முறை பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டியிட்டு வெற்றிபெற்றதை போல், இந்தமுறை உதயசூரியன் சின்னத்தில் கூட தனது கட்சி வேட்பாளரை கடலூரில் களமிறக்க விருப்பப்படுகிறார் வேல்முருகன். இவரது சொந்த அண்ணன் திருமால் வளவன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கடலூர் மாவட்டத்தில் இலவச யு.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகள், உள்ளிட்ட பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறார்.

இதனால் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் திருமால் வளவனுக்கு ஓரளவு நல்ல பரிச்சயம் உண்டு. இதனால் தனது அண்ணன் திருமால் வளவனையே கடலூரில் வேட்பாளராக களமிறக்கும் யோசனையும் வேல்முருகனுக்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இது குறித்து வேல்முருகன் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன் கதிரவனும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ஓராண்டாகவே அதற்கான அடித்தள வேலைகளை சத்தமின்றி செய்து வருகிறார். இவர்களுக்கு மத்தியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி மீது ஒரு கண் உண்டு. ஏற்கனவே அந்த தொகுதியின் எம்.பி.யாக அவர் இருந்தவர். அதுமட்டுமல்ல தனது சொந்த ஊரை உள்ளடக்கிய சொந்த மாவட்டம் கடலூர் என்பதால் அழகிரிக்கும் தேர்தலில் களமிறங்க ஆசை இருக்கிறது.
கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் கடலுர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகின்றன. கடலூர் மக்களவை தொகுதியை பொறுத்தவரை கடந்த ஓரிரு தேர்தல்களில் தான் திமுக, அதிமுக மாறி மாறி வெற்றிபெறுகிறது. அதற்கு முன்னர் தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி கடலூர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications