ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. உங்கள் விண்ணப்பங்கள் செல்லுமா? சரிபார்ப்பு பணிகள் இன்று தொடக்கம்
சென்னை: ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான 2 ஆம் கட்ட முகாம் தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் விண்ணப்பம் சரிபார்க்கும் பணி தொடங்க உள்ளது.
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த மாதம் இதனை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்றவர்கள் யார் என அறிவித்து முகாம்களை நடத்தியது.

வெள்ளிக்கிழமை முதல் கட்ட முகாம்கள் நிறைவடைந்த நிலையில் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் 2 ஆம் கட்ட முகாம் தொடங்கி உள்ளது. நகர்புறங்களை மையமாக வைத்து இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இந்த முகாம்களில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், "1. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற எனது ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது ஒரு முறை கடவுச்சொல் (OTP) தரவை ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புக்காக வழங்க நான் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன். 2. எனது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் இல்லை.
3. எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சதிற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் அல்ல. 4. எனது குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர் யாரும் இல்லை.
5. எனது குடும்பத்தில் மாநில அரசு, ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் யாரும் இல்லை. 6. எனது குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தவிர) யாரும் இல்லை.
7. எனது குடும்பத்தில் யாரும் சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கவில்லை. 8. எனது குடும்பத்தில் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து (Annual turnover) சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் யாரும் இல்லை.

9. எனது குடும்பத்தில் முதியோர் ஓய்வூதியம் (OAP) விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. 10. எனது குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட்டாக 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் இல்லை.
11. விண்ணப்பத்தில் என்னால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை. தவறான தகவல்களைக் கொடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்றது கண்டறியப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவேன்." என 11 உறுதிமொழிகள் வழங்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டு உள்ளது.
இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் விண்ணப்ப படிவங்களில் சரியான தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளதா என்பதை சரிபார்க்கும் பணிகள் இன்று தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications