இஷ்டத்துக்கு செய்தி போடக் கூடாது.. ஆளுநர் மாளிகையை கேட்கனும்! திடீரென வார்னிங் கொடுக்கும் ஆலோசகர்
சென்னை: ஆளுநர் மாளிகை தொடர்புடைய தகவல்களை ஆளுநர் மாளிகை, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் என மேற்கோள்காட்டி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்தி வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநரின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே தொடர்வார் என்ற மசோதாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருக்கிறார்.
இந்த நிலையில் உதகையில் ஆளுநர் மாளிகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணைவேந்தர்கள் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் எனவும், மாநாட்டை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய சில ஊடகங்களில் துணைவேந்தர்கள் ஆளுநரின் மாநாட்டை புறக்கணித்ததாக செய்திகள் வெளியானது. அதை மறுத்த ஆளுநர் மாளிகை நேற்றும், இன்றும் ஆளுநரின் மாநாட்டில் துணைவேந்தர்களும் அவர்களது பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகை குறித்து செய்தி வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டுமென ஆளுநர் ஆலோசகர் திருஞான சம்பந்தம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் "ஆளுநர் மாளிகை தொடர்புடைய தகவல்கள் தொடர்பாக ஊடக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், ஆளுநர் மாளிகை செய்தி சேகரிக்கும் நிருபர்கள் ஆகியோரின் கனிவான கவனத்திற்கு, ஆளுநர் மாளிகை, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் என மேற்கோள்காட்டி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கோள்காட்டி வெளியிடப்படும் தகவல்களின் உண்மைத்தன்மை அல்லது நம்பகத்தன்மையை ஆளுநர் மாளிகையின் உரிய பொறுப்பில் உள்ள அதிகாரியிடமிருந்து சரிபார்க்காமல் வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் அவை தீவிரமானதாகக் கருதப்பட்டு தகுந்த நடவடிக்கைக்காக கவனத்தில் கொள்ளப்படும். இது தொடர்பாக ஊடக சகோதரத்துவத்தின் ஒத்துழைப்பை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
முன்னதாக," சமீப நாட்களில், மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் ஆண்டு மாநாட்டை ஆளுநர் மாளிகை மற்றும் மாநில அரசுக்கு இடையிலான அதிகார மோதல் எனத் தவறாக செய்திகள் பரப்பப்படுகிறது. இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது. ஊட்டி மாநாடு தொடர்பாக கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக நடத்தப்படும் நன்னெறி மற்றும் நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டை, தவறாக விளக்கி, சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் இணைத்து, இதை தமிழக ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கதாகும். இவை அனைத்தும் மாண்பை குலைப்பதாகவும், உண்மைக்கு புறம்பாகவும் இருக்கிறது" என ஆளுநர் மாளிகை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications