ஆண்மையில்லா ஜல்லிக்கட்டு வீரன்.. மனைவியை விட்டுத் தரும் கணவன்! நின்னு பேசும் ராஜேஷின் 2 படங்கள்!
சென்னை: தமிழ் திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக வலம் வந்த ராஜேஷ், இன்று தனது 75ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 150க்கு மேற்பட்ட படங்களில் நடிகர் ராஜேஷ் நடித்திருந்தாலும் கனமான பாத்திரங்களை ஏற்று இருந்த கன்னிப் பருவத்திலே, அந்த ஏழு நாட்கள் அவரது நடிப்பில் வைரமாக ஜொலிப்பவை.
தமிழ் திரையரங்கில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் ராஜேஷ். நடிப்பு மற்றும் இன்றி டப்பிங் கலைஞர், ஆசிரியர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர்.
மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட அவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியிலும் படித்தவர். தொடர்ந்து புரசைவாக்கம், திருவல்லிக்கேணி மேல்நிலைப் பள்ளிகளில் ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர்.

பின்பு அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையலகில் அறிமுகமானார். சிறு சிறு வேடங்களில் தோன்றி வந்த அவர் கன்னிப் பருவத்திலே படத்தில் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட படங்களை பணியாற்றியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பிரபல நடிகர் முரளிக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். நெடுமுடி வேணு உள்ளிட்ட நடிகர்களுக்கும் இவர்தான் டப்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 9 புத்தகங்களை எழுதிய ராஜேஷ், பல நாளிதழ்களுக்கு கட்டுரை எழுதி கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கனா காணும் காலங்கள், களத்து வீடு, அலைகள், கணவருக்காக உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக கார்த்திகை தீபம் சீரியல் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் யூட்யூபர் அவதாரத்தையும் ராஜேஷ் எடுத்திருந்தார்.
கன்னிப் பருவத்திலே:
பல படங்களில் ராஜேஷ் நடித்திருந்தாலும் கன்னி பருவத்திலே படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இன்று வரை ராஜேஷின் நடிப்பு பயணத்தில் கன்னிப்பருவம் ஒரு வைரக்கல் என்று சொல்லலாம். 1984 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ராஜேஷ், வடிவுக்கரசி, பாக்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜல்லிக்கட்டு வீர்ரான ராஜேஷ் வடிவுக்கரசியை காதலிப்பார். ஆனால் வடிவுக்கரசி அவரை வெறுப்பார். பின்னர் வற்புறுத்தல் காரணமாக வடிவுக்கரசியை ராஜேஷ் திருமணம் செய்து கொள்வார்.
ஜல்லிக்கட்டு காளையை அடக்கும்போது ராஜேஷுக்கு ஆண்மை போய்விடும். இந்த நேரத்தில் கணவனால் தனக்கு குழந்தை பெற்றுத் தர இயலாது என்பதை அறிந்து மனமுடைந்த வடிவுக்கரசியை, ராஜேஷ் நண்பனான பாக்கியராஜ் காப்பாற்றுவது போல அவரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வா ர். தொடர்ந்து பாக்கியராஜ் வடிவுக்கரசியை டார்ச்சர் செய்வார். இந்த மூவரை சுற்றி தான் அந்த படம் இருக்கும்.
ஊரே தன்னை வீரனாக புகழும் நிலையில் ஆண்மையற்றவனாக இயலாமையை வெளிப்படுத்தும் விதத்தில் ராஜேஷின் நடிப்பு அபரிமிதமாக இருக்கும். மனைவியிடம் அன்பு, நண்பனிடம் பாசம் என ஒரு கிராமத்து நாயகனை கண் முன் கொண்டு வந்திருப்பார் ராஜேஷ். சொல்லப்போனால் ஒட்டுமொத்த படத்தையும் ராஜேஷ் தான் தாங்கி பிடித்து இருப்பார். சபலத்தால் தவறான வழி சென்ற மனைவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் ராஜேஷ் பட்டு வண்ண ரோசா பாடலை பாடும் போது கரையாதவர் மனம் கூட கரைந்து விடும்.
அந்த 7 நாட்கள்
அதற்கு அடுத்து ராஜேஷின் திரை பயணத்தில் மற்றொரு முக்கிய படம் அந்த ஏழு நாட்கள். மலையாளத்து இளைஞனான பாக்கியராஜ் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வருவார். அப்போது வீட்டின் உரிமையாளராக இருக்கும் அம்பிகாவுடன் காதல் ஏற்படும். ஒரு கட்டத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜேஷ் அம்பிகாவை திருமணம் செய்து கொள்வார். பாக்யராஜின் காதல் முறிந்து போகும். இதற்கிடையே தனக்கு இரண்டாவது மனைவியாக வந்த அம்பிகாவுக்கு முதல் காதல் இருந்ததை எண்ணி வருந்துவார் ராஜேஷ்.
இருவரையும் சேர்த்து வைக்க தானே ஒரு தயாரிப்பாளராக மாறி பாக்கியராஜிடம் கதையை கேட்பார். தனது கதையையே சொல்வார். அந்த கதையில் கிளைமாக்ஸ்சில் அம்பிகாவும் பாக்யராஜும் சேர வேண்டும் என ராஜேஷ் விரும்புவார். அப்போது 'என் காதலி உங்க மனைவியாகலாம், உங்க மனைவி என் காதலியாக முடியாது' எனக் கூறுவார் பாக்கியராஜ். மேலும் நீங்களே தாலியை கழற்றி அம்பிகாவை அனுப்பி வையுங்க என்பார். ஆனால், அம்பிகா மறுத்துவிடுவார்.
இது படிக்கும்போது சாதாரணமாக இருக்கும். ஆனால் இந்த காட்சியைத் திரையில் காணும் போது புல்லரிக்க வைத்து விடும். அந்த அளவுக்கு ராஜேஷும் பாக்யராஜும், அம்பிகாவும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். தற்போது வரை இந்த படம் தமிழ் சினிமாவிம் கல்ட் கிளாசிக் மூவி ஆகும். ஏற்கனவே சொன்னது போல 150-க்கும் மேற்பட்ட படங்களில் ராஜேஷ் நடித்திருந்தாலும் இந்த இரு படங்கள் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாதவை.












Click it and Unblock the Notifications