விஜிபி பூங்கா ராட்டினத்தில் 50 அடி உயரத்தில் தொங்கினோம்! கிண்டல் செய்த ஆபரேட்டர்! கதறிய பெண்கள்!
சென்னை: டாப் கன் ரைடில் சிக்கியவர்களுக்கு பசியால் மயக்கம் ஏற்பட்டதாகவும் விஜிபி நிர்வாகம் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை என்றும் அந்த ரைடில் சிக்கியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராட்டினத்தில் சிக்கிய பெண்கள் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: எங்கள் குடும்பத்தில் இருந்து 11 பேர் வந்திருந்தோம். எல்லா ride களிலும் விளையாடினோம். கடைசியாக இந்த டாப் கன் எனும் ராட்டினத்தில் மாலை 6 மணிக்கு ஏறினோம்.

அப்போது மேலே ஒரு சுற்று சென்ற போதே அந்த ராட்டினம் நின்றுவிட்டது. இது சாதாரண ரைடு இல்லை, பல்டி அடிப்பது போன்ற ரைடு. கோளாறை நீக்கும் போது ரைடு கவிழ்ந்துவிடுமோ என்ற பயம் இருந்தது.
தீயணைப்பு துறை
9 மணி வாக்கில் தீயணைப்பு துறையினர் வந்து காப்பாற்றினர். குழந்தைகள் எல்லாம் நார்மல் ஸ்டேஜிற்கு வரவில்லை. பசி, மயக்கம்! கீழே எட்டி பார்க்கவும் பயமாக இருந்தது. விஜிபிக்கு கொஞ்சமும் பொறுப்பே இல்லை. 36 பேர் 3 மணி நேரமாக சிக்கியிருக்கும் நிலையில் எங்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாப்பாடு
நாங்கள் எல்லாம் சாப்பாடு, தண்ணீர் கேட்டு போன் செய்த பிறகு கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் அடிப்படை விஷயம், இதுகூடவா தெரியாது. இங்கு பாதுகாப்பே இல்லை. எங்களுக்கு முன்பு ரைடு சென்றவர்களுக்கே அந்த ரைடு பழுதானதாம். அப்படியிருக்கும் போது அடுத்த ரைடுக்கு எதற்காக அனுமதித்தார்கள்?
ஆபரேட்டர்
ஆபரேட்டர் கீழே நின்று சிரித்துக் கொண்டிருக்கிறார். ராட்டினம் பழுதானதும் அவர் எங்கேயோ ஓடிவிட்டார். ஒரு சிலர் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தனர். அவர்களது நிலையை நினைத்து பாருங்கள். அந்த ராட்டினம் முறிந்து விடுமோ என்ற அச்சம் எழுந்தது.
சென்னை விஜிபி யுனிவர்சல் கிங்டமில் சாகச விளையாட்டுகளை விளையாட நேற்று நிறைய பேர் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு விளையாட்டாக விளையாடிய பின்னர் வாட்டர் கேம்ஸ் இருக்கும் பகுதிக்கு சென்றனர். அங்கு விளையாடியதும் அவர்கள் டாப் கன் எனப்படும் ராட்சத ராட்டினத்திற்கு சென்றனர்.
ராட்டினம்
அந்த ராட்டினம் தலைகீழாக சுற்றும், திடீரென மேலாக சுற்றும், இப்படி அதில் விளையாடும் நபர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் டிவிஸ்ட் அடிப்பது போல் இருக்கும். இது ஃபன் கேமாக இருக்கும். இந்த விளையாட்டில் மாலை 6 மணிக்கு குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என 36 பேர் ஏறி அமர்ந்தனர். அந்த ராட்டினம் ஒரு சுற்று சுற்றியது. இதில் பலர் தலைகீழான நிலையிலும் பலர் நேரான நிலையிலும் இருந்தனர். திடீரென ராட்டினம் அந்தரத்தில் நின்றதால் பதறினர்.
கதறல்
கதறி அழுதனர். ஆனாலும் விஜிபி நிர்வாகம் சார்பில் எந்த ஆறுதலான வார்த்தைகளும் சொல்லப்படவில்லை என்கிறார்கள். மேலும் 3 மணி நேரமாக அந்தரத்தில் தவித்ததால் குழந்தைகள் பசியாலும் பயத்தாலும் அழுகிறார்கள். தங்களிடம் இருந்த கிரேனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்கிற போது மனிதாபிமானத்துடன் அவர்களுக்கு தேவையான தண்ணீர், பிஸ்கெட், உணவு உள்ளிட்டவை கூட கொடுக்க முன்வரவில்லை.
ராட்டினத்தில் சிக்கியவர்கள்
அந்த ராட்டினத்தில் சிக்கியவர்கள் கேட்டதை அடுத்து ஒவ்வொன்றாக கொடுத்தார்களாம். அது கூட சில நேரம் கழித்து கேட்ட போது, "மீட்கும் பணி நடக்குது, காத்திருங்கள்" என சொல்லிவிட்டு தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து ஒவ்வொருவரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியதுய விஜிபி பொழுதுபோக்கு பூங்காவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications