சென்னை ரிப்பன் பில்டிங் பக்கத்துல.. செங்கல் கட்டிடம்! விரைவில் திறக்கப்படும் விக்டோரியா பப்ளிக் ஹால்
சென்னை: சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பப்ளிக் ஹால் விரைவில் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் ரிப்பன் மாளிகைக்கு நடுவில் இருக்கும் செங்கல் கட்டிடம்தான் விக்டோரியா பப்ளிக் ஹால். நூற்றாண்டு பழமையான இந்த கட்டிடம் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ 32.62 கோடி மதிப்பில் இந்த கட்டிடத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

விக்டோரியா பப்ளிக் ஹால் திறப்பது குறித்து, மாநகராட்சி துணை மேயர் எம். மகேஷ் குமார் DT Next செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "விக்டோரியா பப்ளிக் ஹால் புதுப்பிக்கும் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. திறப்பு விழாவுக்காக முதலமைச்சரிடமிருந்து தேதியை எதிர்பார்த்து இருக்கிறோம். இந்த மாதத்தில் முதலமைச்சரிடமிருந்து தேதி கிடைக்கவில்லை. எனவே அக்டோபர் இரண்டாம் வாரத்திற்குள் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹால், சென்னையின் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி தகவல்படி, முதல் மாடியில் நிர்வாகப் பிரிவும், கண்காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான கலாச்சார மையமும் இருக்கும். தரைத்தளம் அருங்காட்சியகமாகச் செயல்படும்.
புதுப்பித்தல் பணிகளில் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சீரமைப்பு, மேற்கூரை பழுதுபார்த்தல், தரை மற்றும் முதல் மாடிகளை நவீன பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றுதல், மரத்தரை மற்றும் படிக்கட்டுகளை மேம்படுத்துதல், கலைநயமிக்க விளக்குகள் பொருத்துதல் மற்றும் நிலப்பரப்பை அழகுபடுத்துதல் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் கட்டிடத்தின் அசல் அமைப்பைப் பாதிக்காமல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்த கூறுகையில், சிறிய அளவிலான தரைத்தள வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளதாகவும், ஹாலுக்கு வெளியே புல்வெளி அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். சுமார் 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. தரைத்தளத்தில் அருங்காட்சியகமும், முதல் தளத்தில் கலையரங்கமும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் புனரமைப்புப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையத் திட்டமிடப்பட்டது. மேலும், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கும் வகையில் ஹால் பலப்படுத்தப்பட்டுள்ளது.
விஜயநகரத்தின் அப்போதைய மகாராஜா சர் ஆனந்த கஜபதி ராவ், 1883ம் ஆண்டு டிசம்பர் மாதம் விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு அடிக்கல் நாட்டினார். ரிப்பன் கட்டிடம் மற்றும் மூர் மார்க்கெட் வளாகத்திற்கு இடையில் அமைந்துள்ள இந்த ஹால், பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ராபர்ட் ஃபெலோஸ் சிஷோல்ம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் 1887-ல் நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications