காரில் விசிக கொடியை பார்த்துவிட்டு வம்பிழுத்த வழக்கறிஞர்? திருமாவளவன் விவகாரத்தில் புது வீடியோ!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் சென்ற காரை வழக்கறிஞர் ஒருவர் வழிமறித்து வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. வழக்கறிஞரை விசிகவினர் தாக்கியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கறிஞர் தான் வேண்டுமென்றே வழிமறித்து பிரச்சனை செய்ததாக வீடியோ வெளியாகியுள்ளது.
உச்ச நீதிதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற கார், சென்னை ஐகோர்ட் அருகே ஒரு வழக்கறிஞரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி உரசியதாக கூறப்பட்டது.

டூவீலரில் சென்ற வழக்கறிஞர், திருமாவளவனின் கார் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தார். இதைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அந்த வழக்கறிஞரை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதால் வழக்கறிஞர், கார் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதைக் கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மோட்டார் சைக்கிளில் சென்ற வழக்கறிஞரைத் தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால், திருமாவளவன் அந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதுதொடர்பாக திருமாவளவன் ஃபேஸ்புக் நேரலையில் பேசுகையில், "வேண்டுமென்றே வாக்குவாதம் அந்த வழக்கறிஞர் என் வாகனம் முன் தன் வண்டியை நிறுத்திவிட்டு, வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கைகளை ஓங்கியவாறு வந்தார். அவர் தொடர்ந்து எதிர்த்து பேசவே கட்சியினர் அவரை தாக்க முயன்றனர்.
அதற்குள்ளாக காவல் துறையினர் அவரை பார்கவுன்சில் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இதுதான் நடந்தது. என் வாகனம் அவர் வண்டி மீது மோதவில்லை. ஆனால் சிலர் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். விபத்து என்று சொல்லும் வகையில் எதுவும் நடைபெறவில்லை" எனத் தெரிவித்தார்.
வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, திட்டமிட்டு திருமாவளவன் கார் மீது மோதினார். பின் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றபோது, நான் தடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தேன். அந்த நபரின் நோக்கம், திருமாவளவனை தாக்க வேண்டும் என்பதுதான். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளில் சென்றவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஐகோர்ட் வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகார்களின் பேரில் எஸ்பிளனேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தனது வாகனத்தில் மெதுவாகச் சென்று, ஒரு இடத்தில் வண்டியின் வேகத்தைக் குறைத்து நிறுத்துகிறார். விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார் டூவீலர் மீது மோதாமல் கொஞ்சம் இடைவெளி விட்டே நிற்கும் நிலையில், பின்னால் திரும்பி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வண்டி மீது கார் மோதாமல் இருந்த சூழலில் வேண்டுமென்றே அவர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications