Exclusive: பாஜகவை தனிமைப்படுத்துவோம்! தேசியளவில் பெரிய திட்டம் ஒன்று உள்ளது! மனம் திறந்த திருமாவளவன்!
சென்னை: பாஜகவை தனிமைப்படுத்துவதற்கான பெரிய திட்டம் ஒன்று தங்களிடம் உள்ளதாகவும் தேசியளவில் அதனை முன்னெடுக்க முயற்சிப்போம் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாஜகவுக்கு மாற்றாக தேசியளவில் ஒரே அணி மட்டுமே இருக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் 3-வது அணி வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் வாய்ப்பிருந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பை நிறுவுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஒன் இந்தியா தமிழுக்கு திருமாவளவன் அளித்த சிறப்புப் பேட்டியின் விவரம் வருமாறு;
கருணாநிதி பிறந்த நாளை மாநில சுயாட்சி நாள் என பிரகடனம் செய்து கொண்டாட திருமாவளவன் வலியுறுத்தல்
ரமலான் மாதம்
''ரமலான் மாதம் நோன்பிருப்பதை 18 ஆண்டுகளாக தொடர்கிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய நண்பர்கள் இஃப்தார் விருந்திற்கு அழைத்த போது அதில் பேசிய நான், பகல் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருக்கும் உங்களுக்கு நியாயமாக பார்த்தால் நான் தான் இஃப்தார் விருந்து கொடுக்க வேண்டும், நீங்கள் என்னை அழைத்து விருந்து கொடுக்கிறீர்களே என பேசினேன். அப்போது முதல் ஆண்டுதோறும் ரமலான் மாதம் ஒரு நாள் நோன்பிருந்து வந்தேன். பிறகு அதை 3 நாட்களாக மாற்றினேன். நாளுக்கு நாள் விசிகவில் இணைந்த இஸ்லாமிய தோழர்கள் சஹர் உணவுக்கும், இஃப்தார் விருந்துக்கும் ஏற்பாடுகள் செய்து அதில் நான் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துவது அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக 5 நாட்கள் ரமலான் மாதத்தில் நோன்பு வைக்கிறேன்.''
மதம் அடிப்படையல்ல
''மதத்தை அடிப்படையாக வைத்து நான் இந்த நோன்பை வைக்கவில்லை. என் மீது இஸ்லாமியர் சகோதரர்கள் காட்டும் அன்பும், அவர்கள் விடுக்கும் அழைப்புமே இதற்கு காரணம். என் தந்தை இருந்தவரை நான் அமாவாசை அன்று விரதம் இருப்பதை தொடர்ந்து வந்தேன். என் தந்தை மறைவுக்கு பிறகும், அமாவாசை அன்று விரதம் இருக்குமாறு எனது அம்மா என்னை அறிவுறுத்துவார். அதனால் அமாவாசை அன்றும் விரதம் இருந்திருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக மட்டும் விரதம் இருப்பதில்லை. இரண்டாவது எங்களை மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மட்டுமே இந்துவாக கருதுகிறார்களே தவிர வேறு எதற்காகவும் எங்களை ஒரு பொருட்டாக இவர்கள் கருதுவதில்லையே. சங்கராச்சாரியர் உபதேசத்தை ஒரு தலித் அமர்ந்து கேட்கமுடியுமா, சொல்லுங்கள், முடியாது.''
தேசியக்கட்சியாக விசிக
''விடுதலை சிறுத்தைகள் கட்சியை தேசியக் கட்சியாக கொண்டு செல்கிறீர்களா எனக் கேட்கிறீர்கள், 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆந்திரா, கேரளா என பல இடங்களில் எங்கள் கட்சிக்கு அமைப்புகள் தொடங்கப்பட்டன. இப்போது அந்தப் பணிகள் முன்பைக் காட்டிலும் இன்னும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அண்மையில் கூட கர்நாடக மாநிலம் பெங்களூரில் புதிய அலுவலம திறந்து வைத்து கட்சியின் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்தேன். உத்தரப்பிரதேசத்தில் வாய்ப்பிருந்தால் விசிகவின் அமைப்பை நிறுவுவோம்.''
3-வது அணி வேண்டாம்
''பாஜகவுக்கு மாற்றாக ஒரே அணி மட்டுமே இருக்க வேண்டும், மூன்றாவது அணி என்பது பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட வழியமைத்து விடும். என்னைப் பொறுத்தவரை பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, என ஒற்றைக் குடையின் கீழ் இணைந்து வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டும். பாஜக இன்னொருமுறை ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். மம்தாபானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால், என பலரையும் சந்தித்து ஒற்றை அணியில் அவர்களை திரட்ட வேண்டும் என நானும் விருப்பப்படுகிறேன்.''
மக்கள் சந்திப்பு
''என் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. பரபரப்பாக மக்கள் பணிகளை செய்து கொண்டிருக்கும் எனக்கு மக்கள் சந்திப்பு ஒன்று தான் எனது ஸ்ட்ரஸ் ரிலீஃப்.'' இவ்வாறு ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் மனம் திறந்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.