மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்துவதற்கு முன்பு அரை மணி நேரம் பேசிய விக்னேஷ்! என்ன பேசினார்?
சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்துவதற்கு முன்பு விக்னேஷ் அவருடன் அரைமணி நேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெருங்களத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் டிப்ளமோ படித்துள்ளார். இவரது தந்தை உடல்நலக் குறைவால் அண்மையில் இறந்துவிட்டார். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய் காஞ்சனாவுக்கு சென்னை கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பெற்று வந்தார்.

காஞ்சனாவுக்கு 6 மாதங்களாக கீமோதெரபி கொடுத்து வந்த நிலையில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது கேன்சர் உடல் முழுவதும் பரவிவிட்டது என்றும் அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் காஞ்சனா இனி ஆக்ஸிஜன் உதவியுடன் இருக்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர் சொன்னதாக தெரிகிறது.
இந்த ஆத்திரத்துடன் வீட்டிற்கு வந்த விக்னேஷ், இரவு மது சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென காஞ்சனாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் இன்று காலை பெருங்களத்தூரில் இருந்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு ஓபி சீட்டு வாங்கிக் கொண்டு மருத்துவர் பாலாஜியை பார்த்துள்ளார்.
அப்போது உள்ளே சென்ற அவர் கதவை தாழிட்டுவிட்டு பாலாஜியிடம் அரை மணி நேரமாக ஏதோ வாக்குவாதம் செய்துள்ளார். பிறகுதான் விக்னேஷ், டாக்டரை நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டு இடது நெஞ்சிலும் கழுத்திலும் குத்தியுள்ளார். மேலும் காதுக்கு பின்புறம், தலை என 7 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் ரத்தப்போக்கு அதிகமாகி அவர் மயங்கியதும் அறைக் கதவை திறந்து தப்பியோட முயன்றார். அப்போதுதான் அவரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்தனர். டாக்டர் பாலாஜிக்கு, அண்மையில் பேஸ்மேக்கர் வைக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ரத்தம் உறையக் கூடாது என்பதற்காக அவர் மருந்து சாப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கத்திகுத்து விழுந்ததால் ரத்தம் உறையாமல் இருந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. தற்போது மருத்துவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் ஆழமாக கத்தி பட்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மருத்துவரை அவருடைய குடும்பத்தினர் வந்து சந்தித்தனர். அது போல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வைகை செல்வன் உள்ளிட்டோர் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். விக்னேஷின் தாய் வலியால் துடித்ததை தாங்க முடியவில்லை, அதனால் டாக்டரை கொலை செய்யும் திட்டத்துடன்தான் காய்கறி வெட்டும் கத்தியுடன் வந்ததாகவும் காவல் துறை நடத்திய வாக்குமூலத்தில் அவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications