நெல்லை, ஸ்ரீரங்கம், திருப்பூர் வடக்கு.. மொத்தமாக 14 தொகுதிகள்.. திமுகவுக்கு சவால் கொடுக்கும் தவெக!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தவெக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 14 தொகுதிகளில் தவெக வெற்றி பெற கடும் போட்டியை கொடுக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. அதற்கு முன்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் தவெகவின் தாக்கம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எக்ஸிட் போல் முடிவுகளின் போதே தெரிய வந்தது. விஜய்யை கடந்து வேறு ஏதேனும் தவெக வேட்பாளர்கள் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று அக்கட்சியினரும், ஆதரவாளர்களும் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர். அதன்படி தவெகவுக்கு மொத்தமாக பெரம்பூர் தவிர்த்து 14 தொகுதிகளில் களம் சாதகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
வடசென்னை பகுதியில் தவெகவுக்கு அதிக ஆதரவு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அந்த வகையில் மாதவரம் தொகுதி தவெக வேட்பாளர் விஜய் பிரபுவுக்கு இளைஞர்கள் ஆதரவும், உழைக்கும் வர்க்க ஆதரவும் உள்ளது. அதேபோல் ஆவடி, அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகள் ஐடி துறையினர் மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் அதிகளவில் வாழ்கிறார்கள்.
அதற்கேற்ப தவெக வேட்பாளர்களும் இளைஞர்கள் என்பதால், திமுகவுக்கு களத்திலும் சவால் அளித்தனர். இந்த முறை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் 3வது இடத்திற்கு தள்ளப்படுவார் என்று அப்பகுதியினர் பேசி வருகின்றனர். தவெக வேட்பாளர் வெங்கட்ராமனுக்கு இளைஞர்கள் ஆதரவும், பிராமணர்களின் ஆதரவும் அதிகளவில் இருந்தது.
மயிலாப்பூர் தொகுதி மட்டுமல்லாமல் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் கூட பிராமண சமூக மக்களின் ஆதரவு விஜய்க்கு அதிகளவில் இருந்தது. தி நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் கடந்த 2 ஆண்டுகளாகவே பணியாற்றி வந்துள்ளார். சிறிய தொகுதி என்பதால், இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு இருந்தாலே, புஸ்ஸி ஆனந்த் எளிதாக வென்றுவிடலாம்.
அண்ணா நகர், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய தொகுதிகளிலும் அதிமுகவை விட தவெக அதிக வாக்குகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதியில் முன்னாள் எம்பி சத்யபாமா போட்டியிடுகிறார். இவரும் களத்தில் சிறப்பாக செயல்பட்டதால், இந்த தொகுதியில் தவெக கடுமையான போட்டியளிக்கும் என்று பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் நெல்லை தொகுதியில் தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகனுக்கு முக்குலத்தோர் ஆதரவாக இருக்கின்றனர். இங்கு தவெக வெல்ல வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications