தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு வெயிட்டான பதவி கொடுத்த விஜய்! என்ன பொறுப்பு தெரியுமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நேற்று இணைந்தார். மதிமுக, அதிமுக, அமமுக என பல்வேறு கட்சிகள் மாறி, சமீப காலமாக திமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த நாஞ்சில் சம்பத், நேற்று திடீரென விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். நேற்று கட்சியில் இணைந்த நிலையில், இன்று அவருக்கு பரப்புரை செயலாளர் பொறுப்பு அளித்துள்ளார் விஜய்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதுவரை தேர்தல்களையே சந்தித்ததில்லை. முதல் முறையாக தேர்தலில் களம் காண அந்த கட்சி தயாராகி வருகிறது. இதற்காக கட்சியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விஜய் கட்சியில் நாஞ்சில் சம்பத்
வரும் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி என்று கூறி வரும் விஜய் திமுகவுக்கு இணையாக பெரிய கட்சியாக தவெகவை காண்பிக்க முயற்சித்து வருகிறார். இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை தன் பக்கம் கூட்டணி வைக்கவும் முயற்சித்து வருகிறார்கள். எனினும் காங்கிரஸ் திமுகவுடனேயே கூட்டணி வைக்கும் என கூறி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தன் பக்கம் இழுத்துக்கொண்டது தவெக. செங்கோட்டையனை தொடர்ந்து மேலும் சிலர் தவெகவில் இணைவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று நாஞ்சில் சம்பத் தவெகவில் தலைவர் விஜய்யை சந்தித்து இணைந்தார்.
நாஞ்சில் சம்பத் பேச்சு
தவெகவுக்கு ஆதரவான கருத்துகளை கடந்த சில நாட்களாக பேசி வந்த நாஞ்சில் சம்பத் நேற்று தவெகவில் இணைந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் கூறியதாவது:- விஜய்யை சந்தித்து பொன்னாடை அணிவித்து தவெகவில் என்னை இணைத்துக் கொணடேன்.
6 ஆண்டுகள் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தேன். திராவிட இயக்கத்தின் சொற்பொழிவாளர் என சொல்லி, பெரியார், அண்ணா லட்சியங்களை பேசி வந்தேன். என்னை பார்த்ததும் விஜய் உங்க ரசிகன் நான் என கூறினார். இதைக் கேட்டதுமே நான் வியப்படைந்தேன். நாடு முழுக்க பிரசாரம் செய்ய அனுமதித்து இருக்கிறார். என்று கூறினார்.
விஜய் வெளியிட்ட அறிவிப்பு
மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத் பின்னர் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து திமுகவில் இருந்த அவர் அதன் பின்னர் எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் தொடர்பான பொது விவாத மேடைகளில் பேசி வந்தார். இந்த நிலையில் அவர் விஜய் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு இன்று விஜய் பரப்புரை செயலாளர் பதவியை வழங்கியுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பரப்புரை செயலாளர் பதவி
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர். அண்ணன் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள். தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அண்ணன் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர், பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications