இனியும் அவங்களை நம்ப முடியாது.. தவெகவை தூசி தட்டும் விஜய்.. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு புரமோஷனா?
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாடே அதிர்ந்த பிரச்சனையை பொறுப்பற்ற தன்மையுடன் அணுகியது, கட்சிக்கு உள்கட்டமைப்பு இல்லாதது போன்ற விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த விஜய் திட்டமிட்டு வருகிறாராம். தற்போதுள்ள இரண்டாம் கட்ட நிர்வாகிகளை நம்பாமல், தன் நம்பிகைக்குரிய ரசிகர் மன்ற நிர்வாகிகள், நண்பர்களை இரண்டாம் கட்ட தலைவர்களாக நியமனம் செய்ய விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கி சுமார் 2 வருடங்களாகிவிட்டன. 2 மாநாடுகள், கட்சி பொதுக்குழு, செயற்குழு, பூத் கமிட்டி கூட்டம் என்று விஜய் மிகவும் அரிதாகத்தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை ஒருமுறை கூட விஜய் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக விஜய் மாவட்ட வாரிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

கரூர் கூட்ட நெரிசல்
திருச்சி மாவட்டத்தில் தொடங்கி ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் அவர் மக்களை சந்தித்து பயணம் செய்ய திட்டமிட்டார். முதலில் ஒரு நாளுக்கு 3 தொகுதி என திட்டமிட்டு, பிறகு அதை 2 மாவட்டங்களாக மாற்றினர். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பயணம் செய்தார். கரூரில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
இதில் தமிழ்நாடு அரசு, தவெக இரண்டு பேர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. திமுக இதில் அரசியல் செய்கிறது என்று தவெக குற்றம் சாட்டினாலும், அடிப்படையில் இந்த தவறுக்கு தவெக தான் காரணம் என்று பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்தது. விஜய் தாமதமாக கூட்டத்திற்கு சென்றது, கூட்டத்தை சரியாக கட்டுப்படுத்த திணறியது ஆகியவை தான் பிரதான காரணமாக சொல்லப்படுகிறது.
தவெக உள்கட்டமைப்பு
சம்பவம் நடைபெற்று சுமார் 10 நாட்களாகியும் விஜய் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களும் கூட கரூர் செல்லவில்லை. மாவட்ட அளவிலான நிர்வாகிகளே கூட ஒரு வாரத்திற்கு பிறகு தான் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வருகிறார்கள்.
இந்திய அரசியல் வரலாற்றில், ஒரு கட்சி நிகழ்வில் இப்படி ஓர் சம்பவம் நடைபெற்றதே இல்லை. அதற்கு தவெகவின் கட்சி கட்டமைப்பு இல்லை என்பது முக்கிய காரணம். வலுவான இரண்டாம் கட்ட நிர்வாகிகள், கள அரசியல் அனுபமுள்ள மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் இருந்திருந்தால் அவர்கள் இதுபோன்ற கூட்டங்களை சரியாக நிர்வகித்திருப்பார்கள்.
மாற்றம்
ஒருபக்கம் விஜய்யின் பேச்சிலேயே முதிர்ச்சி இல்லை. மறுபக்கம் தவெகவில் சரியான இரண்டாம் கட்ட நிர்வாகிகளோ, மாவட்ட நிர்வாகிளோ இல்லை. தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் ஆகியோரின் ஆலோசனைகள் பெரியளவுக்கு கைக் கொடுக்கவில்லை. இது தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்வதற்காக விஜய் ஆலோசனை நடத்தி வருகிறாராம். அதன்படி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், தனக்கு நெருக்கமான நண்பர்கள் என்று தன்னுடைய நம்பிக்கை பட்டியலில் இருப்போரை இரண்டாம் கட்ட தலைவராக நியமிக்க திட்டமிட்டுள்ளாராம். பொதுவாக விஜய், ஆனந்த், ஜான், ஆதவ், நிர்மல் ஆகியோருடன் ஆலோசனை செய்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார்.
ஆனால் இந்த விஷயத்தில் அவர் அவர்களிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் அவராகவே கையாண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மக்ளை சந்திப்பதில் தொடங்கி, கட்சி கட்டமைப்பு மாற்றம் வரை பல அதிரடி மாற்றங்களுக்கு தவெக தயாராகி வருவதாக விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications