காங்கிரஸ்க்கு எதிரான அன்னா ஹசாரே போராட்டத்தில் பங்கேற்று விட்டு இப்போ கூட்டணி.. விஜய் மீது எழும் விமர்சனம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு தற்போது ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் மக்களின் தீர்ப்பு அமைந்தது. தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வென்றுள்ளது.

இதனால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். விஜய்யின் தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்று 28 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிய காங்கிரஸ் தேர்தல் முடிவுக்கு பிறகு அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளதால் தவெக கூட்டணியின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆதரவை பெற விஜய்யின் தவெக தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே கூட்டணியில் இருந்து விலகி விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்துள்ளதை திமுகவினர் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாகவும் திமுக தரப்பில் இருந்து விமர்சனங்கள் வெளி வந்தது. இதற்கிடையே, காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது ஊழலுக்கு எதிராக லோக்பால் அமைக்க கோரி அன்னா ஹசாரே டெல்லியில் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்தனர். அன்னா ஹசாரவேவின் இந்த போராட்டத்தில் பங்கேற்ற விஜய், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசியிருந்தார். அதாவது காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அண்னா ஹசாராவுக்கு ஆதரவு தெரிவித்த விஜய் தற்போது அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழத்தொடங்கியுள்ளன.
தன்னை தூய சக்தி என்று பேசும் விஜய், காங்கிரஸ் ஊழல் கட்சி என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தை தொடங்கிய அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு தற்போது அதே கட்சியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறாரே என்று சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்வதையும் பார்க்க முடிகிறது.














Click it and Unblock the Notifications