விஜய்க்கு வந்த ஷாக் செய்தி.. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்எல்ஏவுக்கு தடை!
சென்னை: திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே ஆர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், தபால் வாக்கு வேறு மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்ற நிலையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் போட்டியிட்டார். அவருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி களமிறங்கினார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி கே.ஆர். பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பெரியகருப்பன்
தனது மனுவில், "திருப்பத்தூர் தொகுதிக்காக பதிவான ஒரு தபால் வாக்கு தவறுதலாக வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டது. அந்த வாக்கு சரியாக எண்ணப்பட்டிருந்தால் தேர்தல் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது" என்று கூறியிருந்தார். மேலும், அந்த தபால் வாக்கை மீட்டு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும். ரிட் மனு மூலம் தேர்தல் முடிவை சவால் செய்ய முடியாது. இதை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
மேலும், "தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தபால் வாக்குகளை மீட்டு மறு எண்ணிக்கை நடத்த அதிகாரிகளுக்கு சட்டபூர்வ அதிகாரம் கிடையாது" என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், ஒரே பெயர் கொண்ட தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை கையாளும் போது அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவார்கள் என்றும், தபால் வாக்குகளில் தொகுதி எண் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம்
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜரானார். பெரியகருப்பன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இன்று அந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் விஜய் தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளனர். மேலும் திருப்பத்தூர் வாக்கு எண்ணிக்கை ஆவணங்களை பெறவேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டி காட்டியுள்ளனர் இதனால் விஜய்க்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெருபான்மை எண்ணிக்கை
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவின் மூலம் தமிழக சட்டசபை எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 232 ஆக குறைந்துள்ளது. மொத்தம் 234 சட்டசபை உறுப்பினர்கள் உள்ள நிலையில் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு தேவையான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 117 ஆக மாறி உள்ளது. சபாநாயகர் வாக்கு தற்போதைக்கு தேவையில்லை என்பதோடு, 120 எம்எல்ஏக்களின் ஆதரவு விஜய்க்கு இருக்கிறது. இதனால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்தவித சிக்கலையும் எதிர்கொள்ள போவதில்லை என்கின்றனர்.












Click it and Unblock the Notifications