அதிர்ச்சியில் விஜய்.. விஜயகாந்த் கட்சி கூட கட்டுக்கல! ஆஃபர் கொடுத்தும் ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரல
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்த ஒரு கட்சியும் கூட்டணியில் இதுவரை இணையவில்லை. தேமுதிகவும், தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளதால், இனி எந்த ஒரு பெரிய கட்சியும் தவெக கூட்டணியில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி ஆஃபர் வழங்கியபோதும் விஜய் தனித்து விடப்பட்டுள்ளது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் காலம் என்பதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகங்கள், தொகுதி பங்கீடுகள், வாக்குச்சாவடி மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு உள்ளன. அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டு உள்ளன. ஆனால் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை சொல்லாமல் இழுத்தடித்து வந்தது.

கூட்டணி
ஆளுங்கட்சியான திமுக கூட்டணி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக என பலமாக உள்ளது. ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த அதிமுக - பாஜக, அமமுக, பாமக (அன்புமணி) தமாகா, தமமுக என கூட்டணி அமைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. மறுமுனையில் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கியுள்ளது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதல் மாநாட்டிலேயே, திமுக மற்றும் பாஜக தனது எதிரி என்று தெரிவித்து, விமர்சித்து வருகிறார். திமுகவையே முதன்மை எதிரியாக பாவித்து பேசி வருகிறார் விஜய். ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தரப்படும் என்றும் தெரிவித்தார் விஜய்.
விஜய் கொடுத்த கூட்டணி ஆட்சி ஆஃபர்
விஜய்யின் இந்தப் பேச்சு பல்வேறு கட்சிகளுக்கும் தரப்படும் ஆஃபராக பார்க்கப்பட்டது. ஆட்சியில் பங்கு என்ற விஜய்யின் டிரம்ப் கார்டு பல கட்சிகளை அவரது கூட்டணியில் இணைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வரை எந்தக் கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேரவில்லை.
காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள், தவெக உடன் கூட்டணி என பேசி வந்தாலும், காங்கிரஸ் தலைமை, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறத் தயாராக இல்லை எனத் திட்டவட்டமாகவே தெரியவந்துள்ளது. தேமுதிக தவிர மற்ற முக்கிய கட்சிகள் அனைத்தும் கூட்டணியை உறுதி செய்துவிட்டன.
திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக
இந்நிலையில் இன்று திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது. திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். இதன் மூலம் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீட் உடன்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது மக்களோடு மக்களாக களத்தில் இருக்கிறோம். 4×4 அறையில் அமர்ந்து அரசியல் செய்யவில்லை என குறிப்பிட்டு இருந்தார். இன்றைய அரசியல் சூழலில் வீட்டிலிருந்து அரசியல் செய்பவர் என்ற விமர்சனம் விஜய் மீதே இருக்கிறது. பிரேமலதா விஜய்யை பூடகமாக விமர்சிப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனித்து விடப்பட்ட தவெக
தேமுதிகவும், கூட்டணி நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளதால், தற்போது தவெக தனித்து விடப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி ஆஃபர் கொடுத்தும், விஜய் தலைமையிலான கூட்டணியில் எந்தக் கட்சியும் இணையாதது, களத்தில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதையே காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications