விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணும் தவெக இன்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் நடிகரும், நண்பருமான ஸ்ரீநாத்துக்கு விஜய் வாய்ப்பளித்துள்ளார். தூத்துக்குடியில் அஜிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்காமல், தன் நண்பருக்கு அங்கு போட்டியிட வாய்ப்பளித்து இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். இதில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுகவில் இருந்து இணைந்தவர்களுக்கும் விஜய் சீட் வழங்கியிருக்கிறார்.

அஜிதாவுக்கு சீட் இல்லை
புஸ்சி ஆனந்த் திநகரிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திலும், சத்யபாமா திருப்பூர் வடக்கிலும் போட்டியிடுகின்றனர். இதேபோன்று எழும்பூரில் ராஜ்மோகன், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜேசிடி பிரபாகர், திருப்பரங்குன்றத்தில் சி.டி.ஆர். நிர்மல்குமார், திருத்தனியில் சத்யகுமார் போட்டியிடுகின்றனர். அதிமுக மற்றும் திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கும் விஜய் வாய்ப்பளித்துள்ளார்.
குறிப்பாக தனது நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத்துக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார். தூத்துக்குடியில் அவர் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார். ஏற்கனவே புதிதாக வந்தவர்களுக்குதான் பதவி வழங்கப்படுகிறது. எங்களுக்கு வழங்கப்படவில்லை என தவெகவினர் குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படாதது குறித்து விஜய் காரை வழிமறித்த அஜிதாவுக்கு சீட் வழங்கவில்லை.
அஜிதாவுக்கு ஏமாற்றம்
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பு தான் வழங்கவில்லை. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் காத்திருந்தார். ஆனால் அவரது பெயரை விஜய் அறிவிக்கவில்லை. இதனால் அஜிதா ஏமாற்றமடைந்துள்ளார். சிந்தாமணி, பல்லவி, சத்யபாமா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளித்தாலும், மொத்த எண்ணிக்கையில் பெண்களுக்கு குறைவாகவே சீட் ஒதுக்கியுள்ளார்.
யார் இந்த ஸ்ரீநாத்?
விஜய்யின் கல்லூர் கால நண்பர். நடிகர் சஞ்சீவ், ஸ்ரீநாத் எல்லோரும் ஒரு கல்லூரியில் விஜயுடன் ஒன்றாக படித்தவர்கள்.. விஜய் தனது திரைப்பயணத்தை தொடங்கியபோதே ஸ்ரீநாத்தும் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். விஜய் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியானது. அதே படத்தில் விஜயின் நண்பராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர்தான் ஸ்ரீநாத்.
தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு வெளியான விஜயின் 'மாண்புமிகு மாணவன்' படத்திலலும் ஸ்ரீநாத் நடித்துள்ளார். தொடர்ந்து '12b', 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க', 'காதல் வைரஸ்', 'உள்ளம் கேட்குமே', 'உன்னாலே உன்னாலே', 'பீமா', 'தாம் தூம்' மாசிலாமணி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' என பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய்யின் 'வேட்டைக்காரன்' படத்தில் நண்பனாக நடித்து இருப்பார். மாஸ்டர் படத்திலும் சில காட்சிகள் வந்திருப்பார்.
சந்தானம் பட இயக்குநர்
நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் ஸ்ரீநாத் தடம் பதித்துள்ளார். 2009-ல் வெளியான 'முத்திரை', 2014-ம் ஆண்டு வெளியான சந்தானம் நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' ஆகிய படங்களை இவர் தான் இயக்கி இருந்தார். ஆரம்ப காலத்திலிருந்தே விஜயுடன் நட்பில் இருந்து வரும் ஸ்ரீநாத், சினிமாவிலும் ஒன்றாக பயணித்து தற்போது அரசியலிலும் ஒன்றாக தடம் பதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications