பச்சைக் கொடி காட்டிட்டாரா விஜய்? பவன் கல்யாண் சொன்ன "நீங்க பாதி.. ஆனாலும் யாருமே எதிர்பாராத சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஏகப்பட்ட அதிரடி நகர்வுகள் அரங்கேறி வருகின்றன.. இந்த நகர்வுகள் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகளை அடியோடு மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் டெல்லி மேலிடம் வகுத்துள்ள புதிய வியூகம், நடிகர் விஜய்யை சுற்றித்தான் சுழன்று கொண்டிருக்கிறது... அது என்ன தெரியுமா?

சமீபகாலமாக நிலவி வரும் சில அரசியல் மற்றும் தனிப்பட்ட விவகாரங்களால் திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் விஜய்.. எனவே தனது அரசியல் பயணத்தை மிக வலுவாக தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விஜய்யின் இந்த சூழலை பாஜக சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

TVK ADMK Alliance

இரண்டரை ஆண்டு முதல்வர் திட்டம்

அந்த வகையில்தான் அமித்ஷா, பவன் கல்யாண் மூலமாக விஜய்க்கு ஒரு மெகா ஆஃபரை வழங்கியுள்ளார். அதுதான் "இரண்டரை ஆண்டு முதல்வர்" என்ற திட்டம்.

அதாவது, கூட்டணி ஆட்சி அமைந்தால் முதல் பாதியில் விஜய் முதல்வராகவும், அடுத்த பாதியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் இருக்கலாம் என்ற ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது.

பச்சைக்கொடி விஜய்?

ஆரம்பத்தில் இதற்கு தயக்கம் காட்டினாலும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெல்வதில் உள்ள சவால்களை விஜய் உணர்ந்துள்ளார். இதனால், முதல் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் நாற்காலியில் அமர்வதன் மூலம் கட்சி இயந்திரத்தை மாநிலம் முழுவதும் மிக வலுவாக கட்டமைப்பதுடன், அதிகாரத்தை பயன்படுத்தி தொண்டர்களையும் உற்சாகப்படுத்தலாம் என்று விஜய் நினைக்கிறாராம்... அதனால் பவன் கல்யாண் முன்வைத்த திட்டத்திற்கு கிட்டத்தட்ட ஓகே சொன்னதாகவும் தெரிகிறது.

ஆனால், இந்தத் திட்டத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக வந்து நிற்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான்... உண்மையில், தவெக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை என்பது இப்போது தொடங்கியதல்ல. சுமார் 6 மாதங்களுக்கு முன்பேயே விஜய்யின் தரப்பில் இருந்து அதிமுகவிடம் இதே போன்ற ஒரு டீல் பேசப்பட்டதாக செய்திகள் கசிந்திருந்தன.

எடப்பாடி பழனிசாமி பிடிவாதம்

அதனால்தான் குமாரபாளையம் பிரச்சாரத்தில் எடப்பாடி பேசும்போது, "கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே... இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்" என்றும் கூறியிருந்தார்.

ஆனால் "இரண்டரை ஆண்டு ஆட்சி" என்ற டீல் தவெக தரப்பில் பேசப்பட, அதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமல்ல, தான் மட்டுமே முதல்வர் வேட்பாளர் என்பதிலும் அவர் மிக உறுதியாக இருந்தார். எனவே அந்த பேச்சுவார்த்தை ஆரம்பித்ததுமே முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இப்போது என்டிஏ கூட்டணியில் இதே டீல் விஜய்யிடம் பேசப்பட்டுள்ளதாகவும், மீண்டும் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது...

பவன் கல்யாண் மெகா ஆஃபர்

காரணம், மாற்றுக்கட்சி தலைவரை முதல்வராக ஏற்றால் அது அதிமுகவின் அரை நூற்றாண்டு கால பாரம்பரியத்திற்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் செய்யும் துரோகம் என்று எடப்பாடி நினைக்கிறாராம்.

மேலும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தால் கட்சியில் தனது செல்வாக்கு சரிந்துவிடும் என்பதையும் எடப்பாடி நன்றாகவே அறிவார். அப்போது மீண்டும் பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், எடப்பாடி தனது முடிவில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லையாம்...

கட்சியின் சீனியர் நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்களின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி டெல்லி மேலிடத்திடமே தனது அதிருப்தியை அவர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணி

ஒருபுறம் திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி தேவை என்றாலும், இன்னொரு புறம் முதல்வர் நாற்காலியை பகிர்ந்து கொள்வது அதிமுகவின் எதிர்காலத்திற்கே அச்சுறுத்தலாக முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

இதனால் விஜய்யின் சம்மதமும், எடப்பாடியின் மறுப்பும் கூட்டணி பேச்சுவார்த்தையை ஒரு முட்டுச் சந்தில் நிறுத்தி வைத்துள்ளது. இந்த அதிகாரப் போட்டி தமிழக அரசியல் வானிலையில் இன்னும் பல அதிரடி திருப்பங்களை வரக்கூடிய நாட்களில் ஏற்படுத்தும் போல உள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+