200+ தொகுதிகள் உறுதி! விஜய்யை தடுத்தால் ஜனாதிபதி ஆட்சி? தமிழக அரசியலில் அதிரடி க்ளைமாக்ஸ்!
சென்னை: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க இடையூறு வந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி வரும். 6 மாதங்கள் கழித்து தேர்தல் நடந்தால் விஜய் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வார் என சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலில் 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது ஒரு தொங்கு சட்டசபை சூழலில் சிக்கியுள்ளது.

இந்த இக்கட்டான நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்கப்போகும் விதம் குறித்தும், அவருக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் மணி தனது ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
தற்போதைய சூழலில் விஜய்க்கு காங்கிரஸ் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 107 இடங்களுடன் காங்கிரஸின் 5 இடங்கள் சேரும்போது பலம் 112 ஆக உயர்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட இன்னும் 6 இடங்கள் தேவைப்படுகின்றன.
விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே முதல் ஆறு மாதங்களுக்கு ஆட்சியைத் தடையின்றி நகர்த்த முடியும் என்று மணி குறிப்பிடுகிறார். இந்த அரசு ஐந்து ஆண்டுகள் நிலையாக நீடிக்க வேண்டுமானால், அதற்கு அதிமுகவின் ஆதரவு மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும்.
2021-ல் 66 இடங்களை வைத்திருந்த அதிமுக, தற்போது 46 இடங்களாகக் குறைந்து, 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்து நிற்கிறது. 2026இல் எப்படியும் அதிகாரத்திற்கு வந்துவிடலாம் என நினைத்த அதிமுகவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகாரத்தில் இல்லாமல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இருப்பது அக்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதால், விஜய்க்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிர்பந்தம் அதிமுகவிற்கும் இருப்பதாக அவர் விளக்குகிறார்.
திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான 22 ஆண்டுகால மெகா கூட்டணி தற்போது உடைந்துவிட்டது. இதுவரை இரு கட்சிகளும் சேர்ந்து 4 சட்டசபை தேர்தல், 4 நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளார்கள்.
திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டதாக திமுகவினர் விமர்சிக்கிறார்கள். ஆனால் துரோகத்தில் திமுகவுக்கு பெரிய இடம் உள்ளது. ராகுல் காந்தி விரும்பியது போல காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி அமைத்திருந்தால், இந்தத் தேர்தலில் அவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பார்கள்.
திமுகவின் தோல்விக்கு, விஜய்க்கு வாக்களித்த மக்களை 'அணில் குஞ்சுகள்' என இழிவுபடுத்தியதும் ஒரு முக்கியக் காரணம் என்பது அவரது கணிப்பாக உள்ளது.விசிக தலைவர் திருமாவளவன் தனது வாக்கு வங்கி விஜயை நோக்கி நகர்வதை மறைக்கவே, மீண்டும் மீண்டும் பாஜக பூச்சாண்டியைக் காட்டி வருகிறார் என்று மணி விமர்சிக்கிறார்.
மக்கள் இப்போது வளர்ச்சி அரசியலை எதிர்பார்க்கிறார்கள்; வெறும் சித்தாந்தப் பேச்சுகள் மட்டும் இனி எடுபடாது. விஜய்க்கு அதிமுகவின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில், இந்த எண்களை வைத்துக் கொண்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆட்சியைத் தக்கவைப்பது கடினம் என்பதே நிதர்சனம்.
தமிழக அரசியல் ஒரு நெருக்கடியான கட்டத்தை நோக்கி நகர்கிறது. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதைத் தடுக்கும் முயற்சிகள் நடந்தால், அது மக்களின் கோபத்தைத் தூண்டி மீண்டும் ஒரு தேர்தலுக்கே வழிவகுக்கும்.
அப்படி ஒரு தேர்தல் வந்தால் விஜய் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவார் என்றும், அந்தத் தேர்தலைச் சந்திக்க திமுக மற்றும் அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் தயாராக இல்லை. அவர்கள் விஜய்யை தோற்கடிக்க 75 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.
இதனால் மறு தேர்தல் நடந்தால் செலவு செய்ய முடியாத சூழல் உல்லது. கட்சியே வேட்பாளர்களை நிறுத்தினாலும் அவர்கள் போட்டியிட ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்தாகிவிட்டது. நேற்று மாலை நடந்த கூட்டத்திலும் சி.வி.சண்முகம் வேறு மாதிரி பேசுகிறார். இதனால் அதிமுகவில் இருந்து 2/3rd எம்எல்ஏக்கள் விஜய் கட்சிக்கு ஆதரவு தந்தால், அதாவது 46 ல் 2ல் 3 பங்கு என்றால் 32 பேர் தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிவிடலாம். விஜய்யுடனும் 5 ஆண்டுகள் ஆட்சியில் பங்கு பெறலாம். எனவே விஜய்யின் ஆட்சி நிலைத்திருக்க வேண்டுமானால் அதிமுகவின் ஆதரவு முக்கியம் என்கிறார் பத்திரிகையாளர் மணி!












Click it and Unblock the Notifications