அடுத்து பழைய ஓய்வூதிய திட்டம்? கிடைச்ச எல்லா பால்லயும் கோல் போடும் விஜய்! அரசு ஊழியர்கள் செம ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் என லட்சக்கணக்கானோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு பணியாளர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்கள் நிரப்புதல், தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீதும் அரசு விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், அரசு ஊழியர்களுக்கான இந்த அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுவரை 58 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, ஜனவரி மாதம் (01.01.2026) முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். அரசு அலுவலகங்கள் முதல் பள்ளிகள், மருத்துவமனைகள் வரை பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

Vijay DA tn govt

விஜய் அரசு

மத்திய அரசு சமீபத்தில் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் தனது ஊழியர்களுக்கு அதே அளவிலான உயர்வை வழங்கியுள்ளது. இது தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். இந்த உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று அரசு கணக்கிட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் நபர்களும் அடங்குகிறார்கள்.

அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி உயர்வு என்பது வெறும் சம்பள உயர்வு மட்டும் அல்ல. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க அரசு வழங்கும் கூடுதல் நிதி உதவியாகவே இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசு

அதே நேரத்தில், இந்த அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கூடுதல் செலவினம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கான இந்த அறிவிப்பு முக்கிய அரசியல் செய்தியாகவும் மாறியுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்புகள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் கூறுகையில், "புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஊழியர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்வை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. விலை உயர்வு அதிகரித்து வரும் சூழலில் இது நிச்சயமாக உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர். இதனுடன், அரசு ஊழியர்களுக்கான மேலும் சில நல அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்

குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்கள் நிரப்புதல், தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீதும் அரசு விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே வெளியான இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், அரசுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+