கரூர் மக்களை மாமல்லபுரத்தில் சந்திக்கும் விஜய்? ஓட்டு கேட்கவாவது நேரில் போவாரா? நெட்டிசன்கள் கேள்வி
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் தனியார் ரிசார்ட்டுக்கு வரவழைத்து சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அந்த ரிசார்ட்டில் 50-க்கும் மேற்பட்ட அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் தங்கள் இன்னுயிர்களை இழந்த 30ஆவது நாளான 27ஆம் தேதி சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்த தவெக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நடந்ததுமே விஜய் அந்த பகுதி மக்களுக்கு உதவிகளை செய்யாமல் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றுவிட்டார்.
அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பாகுபாடில்லாமல் மக்களுக்கு உதவிய நிலையில் சம்பவத்திற்கு காரணமான தவெக நிர்வாகிகள் ஒருவர் கூட அந்த இடத்தில் இல்லை.
இந்த நிலையில் கரூர் சம்பவத்திற்கு 3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். ஆனால் அதில் கூட இந்த சம்பவம் நடந்ததற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அவர் நேரில் சென்று கரூர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 16ஆவது நாள் காரியத்திற்குள் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் கலங்கி போய் கண்ணீர்விட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கரூர் மக்கள் யாருமே விஜய்யிடம் கோபத்தை காட்டவில்லை என்பதால் அவர் சற்று நிம்மதி பெருமூச்சடைந்தார் என்றும் சொல்லப்பட்டது. இந்த வீடியோ கால் பேச்சே அந்த மக்களின் பல்ஸை பார்ப்பதற்குத்தான் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூரில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்வதற்கு பதிலாக கரூரில் ஒரு திருமண மண்டபத்தில் அவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் சொல்வார் என்றும் அப்போது தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ 20 லட்சம் நிவாரணத்தை கொடுப்பார் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் அந்த பணத்தையும் அவரவர் வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலம் வரவு வைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் கரூரும் இல்லையாம், பாதிக்கப்பட்ட மக்களை சென்னை பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வரவழைக்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது.
அதாவது கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை டி.பி.சத்திரம் மக்களை பனையூருக்கு வரவழைத்து நிவாரணம் வழங்கினாரே, அது போல்!
தற்போது அந்த பிளானிலும் மாற்றமாம். அதாவது மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறாராம். அவர்களுக்காக 50-க்கும் மேற்பட்ட அறைகள் புக் செய்யப்பட்டிருக்கிறதாம். வரும் 27 ஆம் தேதி இந்த சந்திப்பு நடக்கலாம் என சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து திருப்பி கொண்டு போய் சேர்ப்பது வரை ஆகும் செலவுகளை தவெக ஏற்குமாம். எல்லாம் சரி! வரும் தேர்தலில் கரூர் தொகுதிக்கு போய் ஓட்டு கேட்பீர்களா, இல்லை தொகுதி மக்களை பனையூருக்கு வரவழைப்பீர்களா என்ற கேள்வி சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது.
பொதுவாக ஒரு வீட்டில் துக்கம் என்றால் அவர்களது வீட்டிற்கு போய் விசாரிப்பதுதான் முறை! ஆனால் விஜய் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றால் கூட்டம் கூடிவிடும் என்பதால் கரூரில் ஒரு மண்டபத்தில் வைத்து சந்திக்க இருந்ததையாவது பொதுமக்களின் நலன் கருதி ஏற்கலாம். ஆனால் இது எதுவுமே இல்லாமல் விஜய் தான் இருக்கும் இடத்திற்கு அந்த மக்களை வரவழைத்து அவர்களை தங்க தட்டில் தாங்கினால் கூட நியாயம் ஆகாது.
டிபி சத்திரம் மக்களை பனையூருக்கு வரவழைத்ததையே அரசியல் கட்சிகள் விமர்சித்திருந்தனர். இப்படிப்பட்ட சூழலில் கரூர் மக்களையும் சென்னைக்கு வரவழைத்தால் என்ன அர்த்தம் என்ற கேள்வி எழுகிறது. விஜய் கரூருக்கு செல்வதில் அனுமதி கிடைக்கவில்லை என ஆயிரம் காரணங்களை சொன்னாலும் அவரது செயல்பாடுகள் மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்கிறார்கள். எனினும் மாமல்லபுரத்திற்கு வரவழைப்பது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத செய்திதான். எனினும் அதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications