விஜய் பிரச்சார வாகனத்தை பின்தொடர வேண்டாம் - தவெக தொண்டர்களுக்கு பறந்த முக்கியமான 10 ஆர்டர்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்புப் பயணத்தின்போது தொண்டர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, டிசம்பர் 20 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சியில் தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், திருச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால், அவரால் திட்டமிட்டபடி பெரம்பலூரில் பரப்புரை மேற்கொள்ள முடியாத சூழல் உருவானது.

நாகையில் விஜய்
இதையடுத்து நாகையில் புத்தூர் அண்ணா சிலை பகுதியில் நாளை பரப்புரை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, திருவாரூரிலும் தவெக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது, கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம் வெற்றித் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருவதை அனைவரும் அறிவீர்கள். தமிழக வெற்றிக் கழகம், தகுதி மற்றும் பொறுப்புமிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. நம் தலைவர் அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா அன்பினால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ள அவர், இந்தச் சுற்றுப்பயணத்தின் வாயிலாக மிகவும் மனம் நெகிழ்ந்துள்ளார்.
புஸ்ஸி ஆனந்த் அறிக்கை
ஆனாலும் தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் அவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப்பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.
முக்கியமான கட்டுப்பாடுகள்
1. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
2. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (OFB Lamp Poses), மின் கம்பங்கள் (Pillars), மின்மாற்றிகள் (Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது.
3. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
4. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.
5. காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
6. வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.
7. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
8. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
9. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
10. நம் கழகத் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போதும், தலைவர் அவர்களின் வருகை உள்ளிட்டவற்றின்போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications