SORRY வேண்டாம்.. நீதி வேண்டும்! கருப்பு உடையில் ஸ்டாலின் போட்டோவோடு விஜய்! ஸ்தம்பித்த சிவானந்தா சாலை
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த பிறகு புதன் முறையாக போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார் விஜய். சிவகங்கை அஜித் குமார் உள்ளிட்ட காவல் மரணங்களுக்கு நீதி கேட்டு சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருப்பு உடையில் கலந்து கொண்டிருக்கிறார் விஜய். குறிப்பாக 'சாரி வேண்டாம் நீதி வேண்டும்' என முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய பதாகையை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித்குமார் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், நகைத் திருட்டு தொடர்பாக தனிப்படை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யாத போலீசார் அஜித் குமாரை இரண்டு நாட்கள் காவல்துறை வாகனத்தில் வைத்து பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் அஜித்குமாரை கொலை செய்து விட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர். தமிழக எதிர் கட்சிகளும் இது தொடர்பாக குரல் எழுப்பிய நிலையில் நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அஜித்குமாரை தாக்கியதாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் அஜித்குமாரின் வீட்டுக்கே சென்று ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சிவகங்கை காவல் நிலைய மரணத்தை கண்டித்து போராட்டம் நடைபெறும் என தவெக அறிவித்தது. தொடர்ந்து போராட்டத்துக்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை சிவானந்தா சாலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் போராட்டம் நடத்திக் கொள்ள சென்னை காவல்துறை அனுமதி அளித்தது. இதனையடுத்து போராட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் இன்று திட்டமிட்டபடி 10:30 மணிக்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், மற்றும் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், அருண்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள விஜய் பனையூரிலிருந்து காரில் புறப்பட்டு சென்னை வந்தார். காரில் இருந்து இறங்கியதும் நேராக போராட்டம் நடைபெற்ற மேடைக்கு சென்றார். கருப்பு நிற உடையுடன் ஏற்கனவே காவல் நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மேடைக்கு ஏற்றிய விஜய் அவர்களுடன் தானும் மேடையை பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக விஜயின் கையில் இருந்த பதாகை தான் கவனத்தை பெற்றது. 'சாரி வேண்டாம் நீதி வேண்டும்' என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்துடன் இருந்த பதாகையுடன் விஜய் மேடையில் தோன்றினார். அதேபோல பிற நிர்வாகிகளும் அதே பதாகையை கையில் வைத்திருந்தனர். அஜித்குமார் மரணமடைந்தபோது அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 'சாரி' எனக் கூறியிருந்தார். அதனை குறிப்பிடும் வகையிலேயே சாரி வேண்டாம் நீதி வேண்டும் என்ற பதாகையுடன் விஜய் போராட்டத்தில் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications