அரசியலுக்கு ரெடியா நண்பா? நடிகர் விஜயின் அடுத்த அதிரடி! தொகுதிவாரி வாக்காளர் விபரம் சேகரிப்பு.. ஆஹா
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் நடிகர் விஜய் அரசியலில் நுழைய உள்ளார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மேலும் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ள நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த தகவல் நடிகர் விஜய் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்பதற்கு வலு சேர்க்கிறது.
தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் அரசியல் கட்சிகளை நோக்கி படையெடுப்பதும், புதிதாக அரசியல் கட்சி தொடங்குவது ஒன்றும் புதிதல்ல. மறைந்த முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா திரைத்துறையில் சாதித்து அரசியல் பயணத்திலும் முதல்வர் பதவியை அலங்கரித்தவர்கள். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்து எம்எல்ஏவாகி விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.

நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கி எதிர்க்கட்சி தலைவரானார். நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி எம்எல்ஏ ஆனார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மாறாக நடிகர் நெப்போலியன், ராதாரவி, எஸ்வி சேகர், வாகை சந்திரசேகர் உள்பட பலர் எம்எல்ஏக்களாகி உள்ளனர்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பின்வாங்கினார். இந்நிலையில் தான் நடிகர் விஜய் அரசியலில் நுழையலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல மாவட்டங்களில் வெற்றி பெற்றனர். இதையடுத்து நடிகர் விஜய் விரைவில் தீவிர அரசியலில் நுழையலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே தா்ன நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நடிகர் விஜய் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோட்டம் என்ற தகவல் பரவ தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒவ்வொருவரிடமும் தமிழ்நாட்டில் அவர்கள் சார்ந்த தொகுதி குறித்த விபரங்களை சேகரிக்க பிரத்யேக படிவம் வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர்கள், செயலாளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கேள்விகள் தான் தற்போது பேசுப்பொருளாகி உள்ளன.
அதாவது அந்த படிவத்தில் நிர்வாகிகளின் சட்டசபை தொகுதிகளின் பெயர், தொகுதியில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை, ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்களின் விபரங்கள் தனித்தனியே கேட்கப்பட்டுள்ளது. மேலும்
கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள், அவர்கள் சார்ந்த கட்சிகள், அவர்கள் பெற்ற ஓட்டுகள், அவர்களின் சமுதாயம், தொகுதியில் உள்ள 10 முக்கிய இடங்கள், தொகுதியில் வசிக்கும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள், தொகுதியில் அதிக வாக்கு கொண்ட சமுதாய பிரிவு உள்ளிட்ட விபரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி தொகுதியில் மக்கள் அதிகம் மேற்கொள்ளும் தொழில், தொகுதியில் உள்ள மொத்த பூத்கள் எத்தனை? வார்டுகள் எத்தனை? விஜய் மக்கள் இயக்கத்துக்கு வார்டு வாரியாக நிர்வாகிகள் உள்ளனரா?, ஒவ்வொரு தொகுதியிலும் நம் அணியில் உள்ள நிர்வாகிகளான செயலாளர்கள், பொருளாளர்கள் விபரங்களை குறிப்பிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அரசியலில் நுழைவார் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தான் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் இத்தகைய கேள்விகளுடன் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரங்களை சேகரிக்கும் பணியில் தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தீவிரமாக இயங்க தொடங்கி உள்ளன. இது தான் தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு விரைவில் நுழைவார் என்ற செய்திக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications