இப்படியே போனா.. கட்சியை கலைச்சிட வேண்டியதுதான்! உச்சநீதிமன்றத்தை நாட தயாராகும் விஜய்!
சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையை தவெக கோரியிருந்தது. ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மட்டுமல்லாது விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொர்பாக உச்சநீதிமன்றத்தை நாட விஜய் தரப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். மதியம் 12 மணிக்கு விஜய் கரூர் வருவார் என்று, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், 7 மணி நேரம் தாமதமாக பிரச்சாரத்திற்கு வந்தார் விஜய். அவரை பார்க்க கூட்டம் முந்தியடித்த நிலையில், நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முன்னர் அரசியல் நிகழ்வில் இப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டது கிடையாது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
சிபிஐ கோரிய வழக்கு
மறுபுறம் இந்த சம்பவத்தில் சதி நடந்திருக்கிறது என்றும், வழக்கை தமிழ்நாடு போலீசார் விசாரிக்க கூடாது, மாறாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரி தவெக உட்பட 7 பேர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், காவல்துறையினரின் போதுமான ஏற்பாடு இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என்றும், எனவே வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் காவல்துறை மீது தவறு என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை, எனவே சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை என்று அரசு தரப்பு மறுத்தது.
தமிழக அரசுக்கு கேள்வி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சரமாரியான கேள்விகளை அடுக்குகின்றனர். அதாவது, விஜய் பிரச்சாரத்திற்கு மாநில நெடுஞ்சாலையில் எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே? கரூர் பிரச்சாரத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை சட்டம் ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா? பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்புதானே? என்று கேள்விகளை எழுப்பினர்.
தவெகவுக்கு பின்னடைவு
பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் விசாரணை இன்னும் தீவிரமடையவில்லை, தொடக்க கட்டத்தில்தான் இருக்கிறது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் கறாராக மறுத்துவிட்டது. மட்டுமல்லாது, கூடுதல் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்றும், அந்த மனுக்கள் மீது தமிழக அரசும், விஜய்யும் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
கைது நடவடிக்கை
இதையடுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவும் நேற்று விசாரிக்கப்பட்டு, ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இது தவெகவினருக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில்தான் இந்த பஞ்சாயத்து எனில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தவெகவுக்கு கடுமையான அடி விழுந்திருந்தது.
விஜய் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை, பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாகனம், பைக்குகள் மீது மோதிய நிலையில் ஏன் பிரச்சார வாகனத்தை இன்னும் பறிமுதல் செய்யவில்லை? சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்த ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தை நாடும் விஜய்
இந்நிலையில் தொடர்ந்து தவெகவுக்கு எதிரான கருத்துக்கள் வந்துக்கொண்டிருப்பதால், இன்று நீலாங்கரையில் இருக்கும் தனது இல்லத்தில் சட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இந்த ஆலோசனையில் உச்சநீதிமன்றத்தை நாடுவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சிபிஐ விசாரணை மற்றும் புஸ்ஸி ஆன்ந்த், சி.டி.நிர்மல்குமார் ஆகியோரை மீட்க உச்சநீதிமன்றத்தை நாடலாம் என விஜய் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அநேகமாக நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தை விஜய் நாடலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications