வெட்டி பந்தா வேண்டாம்.. விஜய் சொன்னதை அப்படியே ஃபாலோ செய்யும் அமைச்சர்கள்! வியக்கும் அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சியை தற்போது அமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசு, ஆரம்ப கட்டத்திலேயே மிக எளிமையாக, அரசுக்கு கூடுதல் செலவு வைக்காத நடவடிக்கைகளை கடைப்பிடிக்க தொடங்கியிருப்பது தலைமைச் செயலக அதிகாரிகளிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அலுவலக அறைகளை எந்த மாற்றமும் இல்லாமல் தற்போது புதிதாக பதவியேற்ற தவெக அமைச்சர்கள் பயன்படுத்தி வருவது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

பொதுவாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள் முழுமையாக மாற்றம் செய்யப்படும். புதிய நாற்காலிகள், மேஜைகள், திரைச்சீலைகள், உள் அலங்காரங்கள், பெயர்ப் பலகைகள் உள்ளிட்டவை புதிதாக அமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.

Vijay Minister Secretariat

இதற்காக பல லட்சம் ரூபாய் வரை அரசு செலவிடும் நிலையும் இருந்தது. ஆனால், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு இந்த முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10-ஆம் தேதி பதவியேற்ற முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள், தற்போது முந்தைய அமைச்சர்கள் பயன்படுத்திய அறைகளையே அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள்.

விஜய் அரசு

அமைச்சர்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ துறை ஒதுக்கீடு முழுமையாக அறிவிக்கப்படாத நிலையிலும், அவர்கள் தலைமைச் செயலகத்தில் பணிகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பயன்படுத்திய அறையை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பயன்படுத்தி வருகிறார். அதேபோல், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பயன்படுத்திய அறையை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய அறையை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் அறையை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் ஆகியோர் பயன்படுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள்

முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்படுத்திய அறையை அமைச்சர் பி. வெங்கடரமணனும் எந்த மாற்றமும் இல்லாமல் பயன்படுத்தி வருகிறார். "ஏற்கெனவே அனைத்து வசதிகளும் சரியாக இருக்கும் நிலையில் தேவையற்ற செலவு ஏன் செய்ய வேண்டும்? மக்கள் பணத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்.

சிக்கன நடவடிக்கை

இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களிலும் விவாதமாகியுள்ளது. "புதிய அரசு ஆடம்பரத்தை தவிர்த்து நிர்வாக செலவை குறைக்க முயற்சிக்கிறது" என்று சிலர் பாராட்டி வருகிறார்கள். அதேசமயம், "இது வெறும் ஆரம்பகட்ட அரசியல் இமேஜ் கட்டுமானமா?" என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், அமைச்சர்களுக்கான அரசு வீடுகள் ஒதுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

முன்னாள் அமைச்சர்களுக்கு அரசு வீடுகளை காலி செய்ய ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை சேர்ந்த அமைச்சர்கள் தங்கள் சொந்த வீடுகளில் இருந்தும், வெளிமாவட்ட அமைச்சர்கள் தனியார் விடுதிகளில் தங்கியும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளிமாவட்ட அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். அதே நேரத்தில் புதிய அரசு நிர்வாகத்தில் சிக்கன அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+