கிணற்றில் தள்ளி விட்டாலும் மீண்டு வந்து அரசாண்ட பைபிள் கதை! விஜய் சொல்ல சொல்ல, அரங்கில் ஆர்ப்பரிப்பு
சென்னை: கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட விஜய், பேசுகையில் கிணற்றில் தள்ளினாலும் அரசாண்ட இளைஞர் குறித்து பைபிளில் வந்த ஒரு கதையை சுட்டிக் காட்டி பேசிய போது அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். விஜய்யும் சிரித்துக் கொண்டே சில விஷயங்களை பேசினார்.
தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ந்தது. இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டார். அவர் அங்கு வந்திருந்த பேராயர்கள், அருளாளர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொடுத்து கொடுத்தார்.
பின்னர் எல்லாரும் சேர்ந்து விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். அப்போது விஜய் பேசுகையில் "அன்பும் கருணையும் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை! இவை இரண்டுமே இருக்கும் மனம்தான் தாய் மனம்! நம் தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட மண்தானே! தாயன்பு கொண்ட மண் தானே! ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றுதானே!

பொங்கல், தீபாவளி
பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை எல்லாரும் சந்தோஷமாக பகிர்ந்து கொள்ளும் மண்தானே தமிழகம்! வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறு வேறு என்றாலும் நாம் எல்லோருமே சகோதரர்கள்தான்.
கடவுள் நம்பிக்கை
அதனால்தான் நாம் அரசியலுக்கு வந்ததுக்கு பிறகு கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்தது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின நம்பிக்கையை மதிக்க சொல்லித் தரும். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை இருந்துவிட்டாலே போதும்.
நம்பிக்கை
எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் ஜெயிக்கலாம். அப்படிப்பட்ட நம்பிக்கையோட வலிமையை பற்றி சொல்வதற்கு பைபிளில் நிறைய கதைகள் இருக்கின்றன. அதை படிக்காதவர்கள் படித்து பாருங்கள். அதில் குறிப்பாக ஒரு கதையை பற்றி சொல்கிறேன்.

இளைஞனுக்கு எதிராக
ஒரு இளைஞனுக்கு எதிராக தனது சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு அவனை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு அதன் பிறகு அவர் எப்படி மீண்டு வந்து அந்த நாட்டுக்கே அரசனாகி (தவெக நிர்வாகிகள் கை தட்டி ஆர்ப்பரித்தனர், மீண்டும் அரசனாகி என விஜய் சொன்ன போதும் அதைவிட அதிக உற்சாகத்துடன் கை தட்டினர்.) தனக்கு துரோகம் செய்த தனது சகோதரர்கள் மட்டுமில்லை அந்த நாட்டையே எப்படி காப்பாற்றினாரு சொல்லி நிறைய கதைகள் பைபிளில் இருக்கிறது.
நமட்டு சிரிப்பு சிரித்த விஜய்
படிக்காதவங்க படிச்சி பாருங்க. அந்த குறிப்பிட்ட கதை யாரை பற்றின கதை (விஜய்யும் சிரித்தார். அப்போது நிர்வாகிகள் ஆரவாரம் செய்தனர்) என்பதை நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். அது உங்களுக்கே தெரியும்.
தவெகவினர்
ஒரு உறுதியை கொடுக்க விரும்புகிறேன். நானும் தவெகவினரும் சமூக நல்லிணக்கத்தை 100 சதவீதம் பாதுகாப்போம். எந்தவித சமரசமும் இருக்காது. அதற்காகத்தான் நமது கொள்கைக்கு மதசார்பற்ற கொள்ளை என பெயரிடப்பட்டுள்ளது.
ஒளி பிறக்கும்
கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைவரும் உறுதியாக இருங்கள். வெற்றி நிச்சயம். எல்லாரும் இருந்து சாப்பிட்டுவிட்டுதான் செல்ல வேண்டும். இவ்வாறு விஜய் பேசினார். பின்னர் தனக்கு ரோஜாப்பூ கொடுத்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
கேக் வெட்டி மகிழ்ந்த விஜய்
பின்னர் குழந்தைகளுடன் சேர்ந்து சான்டாகிளாஸ் கண்ணாடி அணிந்து கொண்டு கேக் வெட்டி ஊட்டிவிட்டார், குழந்தைகளும் அவருக்கு கேக் ஊட்டினர். பின்னர் குழந்தைகளுடன் ஒரு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றார் விஜய்.












Click it and Unblock the Notifications