லோக்கல் டூ நேஷனல்.. தலைப்புச் செய்தியான தவெக! இனி நான் ரொம்ப பிசி.. குஷியான விஜய்! அடுத்தது இதுதானா?
சென்னை: மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் விஜய். சிவகங்கை அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் மக்கள் கவனத்தை பெறும் வகையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளார் விஜய். இதற்காக இரண்டாவது முறையாக பரந்தூர் செல்ல இருப்பதாக கூறுகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்தவர்களில் புதிய வரவு விஜய். சினிமாவில் நடித்து வந்தாலும் நீண்ட காலமாகவே அரசியல் மீது விஜய்க்கு ஒரு கண் இருந்தது. அதனால் தான் 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.
அதற்கு பிறகு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நேரடி அரசியலில் குதிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து விஜயின் படங்கள் நெருக்கடிக்குள்ளாக, இப்போது வந்தால் தான் சரியாக இருக்கும் என முடிவெடுத்த விஜய் அரசியலில் குதித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் அவரது கட்சி பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே கட்சியின் பெயரையும் அறிவித்தார் விஜய். தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகப் பிரமாண்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனம் விஜய் மீது விழுந்தது. சிறிய சிறிய கட்சிகள் எல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்திக் கொண்டிருக்க பனையூரை விட்டு வெளியே வராத விஜய் அறிக்கை அரசியல் மட்டுமே செய்து கொண்டிருந்தார்.
இதனால் வெளியே வாங்க விஜய்! என அவரது கட்சியினரே கூறும் அளவுக்கு இருந்தது விஜயின் செயல்பாடுகள். இந்த நிலையில் முதன்முறையாக சென்னையை விட்டு கள அரசியலுக்கு வர காரணம் பரந்தூர் விமான நிலையம். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க பகுதி மக்கள் 1000 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் நிலையில் நேரடியாக விஜய் அங்கு சென்று மக்களின் போராட்டத்திற்கு துணை நிற்பேன் என கூறினார். அதற்குப் பிறகு அந்த விவகாரம் கண்டு கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு நிலம் பத்திரப்பதிவு துவங்கியிருக்கிறது. இதை அடுத்து போராட்டத்தை தீவிர படுத்த பரந்தூர் மக்கள் முடிவெடுத்துள்ளனர். மேலும் விஜய்க்கு துணை நிற்போம் எனவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே முதல் போராட்டத்தில் பங்கேற்றார் விஜய். மொத்தமே இரண்டரை நிமிடங்கள் தான் விஜய் பேசினாலும், அது தேசிய அளவில் ஊடகங்களில் கவனம் பெற்றது.
காரணம் தமிழகத்தில் சிவகங்கையில் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாருக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம். அதிலும் குறிப்பாக ஏற்கனவே காவல் நிலைய மரண சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை மேடை ஏற்றியது கவனத்தை ஈர்த்தது. விஜய் சிறிது நேரமே பேசியது விமர்சனத்திற்கு உள்ளானாலும், விஜயின் முன்னெடுப்பு பலரையும் கவனிக்க வைத்தது. இந்த நிலையில் முதல் போராட்டமே வெற்றிகரமாக அமைந்திருப்பதால் உற்சாகமடைந்திருக்கும் விஜய் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்.
அவர் கட்சி சார்பில் மண்டல மாநாடுகள், மாநில மாநாடு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டால் மக்களின் ஆதரவை பெற முடியும் என்பது விஜயின் எண்ணம். அதற்காக அவர் மீண்டும் தேர்ந்தெடுப்பது பரந்தூரை.. தற்போது அங்கு நில பத்திரப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 15ஆம் தேதி முதல் பரந்தூர் மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில் அதில் விஜய்யும் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.
இதற்காக இடமும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் நடைபெற்றதை விட மிகப்பெரிய அளவிலான கூட்டத்தை திரட்டி போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். இதற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் ஆனந்த் செய்து வருகிறார். விரைவில் இரண்டாவது முறையாக விஜய் பரந்தூருக்கு செல்ல இருக்கிறார். தேதி மட்டும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications