விஜய்யால் தேர்தலில் எந்த பாதிப்பும் வராது.. மெயின் பாயிண்ட்டை சொன்ன அமைச்சர் பிடிஆர்! கவனிச்சீங்களா
சென்னை: ''விஜய் அரசியலுக்கு வருவதை பாராட்டுகிறேன். விஜயை போன்ற ஒரு பிரபலமான நபர் அரசியலுக்கு வரும்போது மக்களிடம் ஆர்வம் அதிகரிக்கும். இருப்பினும், தேர்தல் வெற்றி என்பது வெறும் கூட்டம் கூட்டுவது, பிரசாரம் மட்டும் அல்ல. வாக்காளர்களை அணி திரட்டவும், வாக்குப்பதிவு தினத்தன்று அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யவும் ஒரு வலுவான அமைப்பு ரீதியான கட்டமைப்பு தேவைப்படுகிறது'' என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜயால் திமுக மற்றும் அதிமுக வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி விஜய் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் இளம் வயதினரின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் தான் விஜயின் அரசியல் வருகை பற்றி தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) விளக்கம் அளித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக ''இந்தத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பற்றி பரவலாக பேசப்படுகிறது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
''நீங்கள் களத்துக்கு சென்று நிலவரத்தை கண்கூடாக பார்க்க வேண்டும். விஜய் அரசியலுக்கு வருவதை நான் பாராட்டுகிறேன். எந்த ஒரு ஜனநாயகமும் பல அரசியல் கட்சிகளுடன் ஒரு துடிப்பான அரசியல் சூழலை முன்னெடுக்கும்போது பயனடைகிறது. விஜயை போன்ற ஒரு பிரபலமான நபர் அரசியலுக்கு வரும்போது மக்களிடம் இயல்பாகவே ஆர்வத்தை தூண்டும். இன்னும் சொல்லப்போனால் தேர்தலில் ஆர்வம் காட்டாத இளைஞர்களிடம் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் இது ஒரு நேர்மறையானது.
இருப்பினும், தேர்தல் வெற்றி என்பது வெறும் கூட்டம் கூட்டுவது, பிரசாரம் மட்டும் அல்ல. வாக்காளர்களை அணி திரட்டவும், வாக்குப்பதிவு தினத்தன்று அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யவும் ஒரு வலுவான அமைப்பு ரீதியான கட்டமைப்பு தேவைப்படுகிறது. பிரசாரத்தில் மட்டும் கவனம் செலுத்துவது போதாது என்பது எனது அனுபவம். உண்மையில் பிரசாரத்தில் கூடும் கூட்டத்தை வாக்குகளாக மா்ற களத்தில் வலுவான கட்டமைப்பு தேவை'' என கூறியுள்ளார்.
இதன்மூலம் விஜயிடம் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பு இல்லை. இது அவருக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இதனால் விஜய்க்கு கூட்டம் கூடினாலும் கூட தேர்தலில் அது வாக்குகளாக மாறாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications