“பிரசாந்த் கிஷோருக்கு நடந்தது.. விஜய்க்கும் நடக்கும்! பீகார் தேர்தல் ஒரு பாடம்”-தமிழிசை செளந்தரராஜன்
சென்னை: கட்சி தொடங்கிய உடனே முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைத்தால் பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு நடந்தது தான் விஜய்க்கும் நடக்கும் என பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை செளந்தரராஜன் கூறியிருக்கிறார்.
சென்னை திருவேற்காட்டில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்திக்கு மரண அடி
தமிழிசை சௌந்தரராஜன் மேலும் பேசியதாவது, "பீகார் தேர்தல் தமிழகத்திற்கு பாடத்தை சொல்லி கொடுத்திருக்கிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை (SIR) பீகாரில் பாஜகவுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் சாதகமாக அமைந்திருக்கிறது. பீகாரில் யாரும் எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை. ராகுல் காந்திக்கு மக்கள் தேர்தலில் மரண அடி கொடுத்திருக்கிறார்கள்.
ஓட்டு திருட்டு குறித்து ராகுல் காந்தி பேசுகிறார், ஆனால் மக்களின் ஓட்டு அவர்களிடத்தில்தான் இருக்கிறது. இதை அவர் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவேதான் ராகுல் காந்தியின் ஓட்டை திருடி, பாஜகவுக்கு வாக்களித்து மரண அடி கொடுத்திருக்கிறார்கள்.
பீகாரில் மறு தேர்தல் கிடையாது
பீகாரில் யாரும் மறு தேர்தலை கேட்கவில்லை. ஓட்டு திருட்டு இருந்தால் மறு தேர்தல் கேட்டிருப்பீர்களே! மக்கள் ரோட்டில் இறங்கி போராடிருப்பார்களே! அனால் பீகாரில் அப்படி யாரும் கேட்கவில்லை. SIR-ஐ ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொல்கிறவர்கள், அதை பார்த்து பயப்படுகிறார்கள். திமுக தொடர்ந்து வெற்றிப்பெறுவது போலி வாக்காளர்களால்தான்.
விஜய்க்கும் இதே நிலைமைதான்
SIR-ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விஜய் அறிவித்தார். அதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று நான் அப்போதே சொன்னேன். ஆர்பாட்டத்திற்கு திரட்டப்படும் ஆட்களை கொண்டு, SIR படிவங்களை நிரப்ப உதவி செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தினேன். 30 நாட்களுக்குள் SIR சாத்தியமில்லை என்று விஜய் கூறியிருந்தார். நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அதில் SIR எப்படி சாத்தியம் என்று விவரித்திருக்கிறேன். ஆனால் விஜய், SIR நடவடிக்கையால் வாக்குகள் பறிபோகும் என்றும், தவெக வாக்காளர்களுக்கு உரிமை பறிக்கப்படும் என்றெல்லாம் சொல்கிறார். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
பிரசாந்த் கிஷோர் தெரியுமா?
திமுகதான் அப்படி சொல்கிறது எனில், நீங்களுமா? உங்களை போன்ற புதிய கட்சிகளுக்கு SIR நிச்சயம் உதவி செய்யும். புதிய வாக்காளர்கள் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். எனவே அதேபோல பாசிட்டிவாக பேசுங்கள். நீங்கள் என்னதான் SIRக்கு எதிராக பேசினாலும் அதை தடுக்க முடியாது. நீதிமன்றத்தால் கூட அதை தடுக்க முடியாது. இதற்கு முன்னர் போடப்பட்ட வழக்குகளின் நிலை அதுதான். திமுக நீதிமன்றத்திற்கு போனபோது கூட, நீதிமன்றம் SIR-ஐ நிறுத்தவில்லை. விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் பாடத்தை சொல்லி கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்தை மதிக்க வேண்டும்
சீமான் கூட, SIR இஸ்லாமிய வாக்காளர்களை நீக்குவதாக கூறியிருந்தார். ஆனால், இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் நேர்மையை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். 2024ல் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றபோது நேர்மையை சந்தேகிக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? அப்போது வாக்கு இயந்திரங்கள் நன்றாக வேலை பார்த்தது, அப்படித்தானே! முதலில் ஜனநாயகத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications