விஜய் பேச்சிலேயே மிக முக்கிய மூவ் இதுதான்.. கூட்டணிக்கு ரெடி! அதிகாரத்திலும் பங்கு தருவதாக அறிவிப்பு
சென்னை: தங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளுக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசிக-திமுக இடையே மோதல் எழுந்த நிலையில், விஜய்யின் இந்த அறிவிப்பு திமுகவுக்கு செக் வைக்கும் நகர்வாக பார்க்கப்படுகிறது.
விஜய் தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை அறிவித்ததிலிருந்து, தமிழ்நாட்டின் அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று இக்கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் சிறப்பாக நடந்திருக்கிறது. இதில் உரையாற்றிய விஜய் கட்சியின் கொள்கைகளாக, மதச்சார்பற்ற சமூகநீதியை அறிவித்திருக்கிறார். அதேபோல பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், காமராஜர் மற்றும் வேலுநாச்சியார் ஆகியோரை தனது அரசியல் வழிக்காட்டியாக ஏற்றிருக்கிாறர்.

இப்படி இருக்கையில், தனது உரையில் திராவிட மாடல் குறித்தும், ஊழல் அரசியல் குறித்தும், மதவாதம் குறித்தும் விஜய் பேசியிருக்கிறார். இந்த பேச்சு தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. தனது உரையை முடிப்பதற்கு முன்னர், கூட்டணி குறித்து தவெக நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அதாவது, தவெக கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற வார்த்தை கடந்த சில நாட்களாக பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது தமிழக அரசியலில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் அதிகாரத்தை எந்த வகையிலும் பகிர்ந்துக்கொண்டதில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு துணை முதல்வர் உட்பட பல்வேறு பதவிகள் ஆட்சி அதிகாரத்தில் வழங்கப்படுகிறது. இப்படி இருக்கையில் சமீத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, திமுகவின் ஆட்சியில் விடுதலை சிறுத்ததைகள் கட்சிக்கு பங்கு வேண்டும் என்று கேட்டது.
"சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா?" என்று பளிச் என கேட்டுவிட்டார்.
இதை உடன்பிறப்புகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. எனவே, விசிக தொண்டர்களுக்கும், திமுக உடன்பிறப்புகளுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் பெரும் பஞ்சாயத்து வெடித்தது. ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என் ஆ.ராசா உள்ளிட்டோர் வலியுறுத்த தொடங்கினர்.
செய்தியாளர் சந்திப்பில், திருமாவளவனிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது," ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை நாங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்" என்று கூறியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் விசிக அவ்வளவு அழுத்தமாக இக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தவில்லை.
இந்த கோரிக்கையை சுட்டிக்காட்டி, திமுக கூட்டணிகள் அதிமுக பக்கம் தாவிவிடும் என்று பலரும் கணித்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இக்கோரிக்கையை எழுப்பிய, ஆதவ் அர்ஜுனா மீது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விசிக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இந்த சூழலில்தான் நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது அரசியல் திட்டம் குறித்து பேசுகையில், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறியுள்ளார். நம்மை நம்பி வந்தவர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. எனவே ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு திமுக கூட்டணி கட்சிகளுக்கு போடப்படும் தூண்டிலாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மூலம் திமுகவுக்கு, தவெக செக் வைக்க முயல்வதாகவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications