ஒரு FIR-க்கே தலைமறைவான புஸ்ஸி ஆனந்த்! தவெகவில் ஆதவ், நிர்மல்குமார் பதவியை கலைக்கும் விஜய்?
சென்னை: தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரின் முக்கிய பொறுப்புகளை அடியோடு கலைக்கும் முடிவுக்கு விஜய் வந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவர் பதவியை விஜய் வைத்துக் கொண்ட நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்தை நியமித்தார்.

இணை பொதுச் செயலாளராக சி.டி.நிர்மல் குமாரையும் தேர்தல் பிரச்சார வியூக பிரிவின் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனாவையும், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரை விஜய் நியமித்தார்.
இந்த நிலையில் இந்த நியமனங்கள் ஆரம்பத்திலிருந்தே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருக்குள் எழுந்த ஈகோ மோதல்களும் ஆடியோ மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அது போல் கட்சியில் பதவிகளை ஆள், பணம், ஜாதி, அந்தஸ்து பார்த்து புஸ்ஸி ஆனந்த் கொடுப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. தவெக நிர்வாகிகளும் புஸ்ஸி ஆனந்த் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
மேலும் பதவிக்காக அவர் ரூ 15 லட்சம் வரை பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விஜய்யிடம் தங்களை நெருங்கவே விடுவதில்லை என்றும் தங்களை எல்லாம் நாய் மாதிரி நடத்துகிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
கட்சியில் உண்மையாக பணியாற்றும் நிர்வாகிகளை விஜய்க்கு அறிமுகப்படுத்துவது கூட கிடையாது என்றும் பணக்கார நிர்வாகிகளை மட்டுமே அவர் விஜய்யிடம் கொண்டு செல்கிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக இருந்தது அவர் மீதான கோபத்தை மேலும் அதிகரித்தது. ஒரு வழக்குப் பதிவுக்கு கூட தாங்காமல் இப்படி ஓடியிருக்கிறார்களே என விமர்சனங்களும் எழுந்தன.
விஜய் குறித்தும் கட்சி குறித்தும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் அதற்கு பதிலளிக்காமல் இவர்கள் எல்லாம் ஓடி ஒளிந்திருக்கிறார்களே என்ற ஆதங்கம் ரசிகர்களிடையே எழுந்தது.
கைதுக்கு அஞ்சி தவெக நிர்வாகிகள் தங்களை காத்துக் கொண்டார்களே தவிர, தொண்டர்களுக்கு எப்படி அரணாக இருப்பது என்பதை செய்ய தவறிவிட்டனர், கரூர் விவகாரத்தை எப்படி கையாள வேண்டும் என்பது கூட தெரியாமல் அவர்கள் காணாமல் போனார்கள் என்றெல்லாம் தொண்டர்கள் மத்தியில் கோபம் எழுந்துள்ளது.
அடுத்த கட்ட தலைவர்கள் ஓடி ஒளிந்து கொண்டதால் விஜய், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாத நிலைக்குச் சென்றுவிட்டார். ஆலோசனை செய்ய கூட ஆள் இல்லாமல் அவர் தவித்து போயிருப்பார்.
இதன் பின்னர்தான் வெங்கட்ராமனுடன் விஜய் பேசியுள்ளார். மேலும் அருண்ராஜையும் விஜய் அழைத்து பேசினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடியோ கால் போட்டு விஜய்க்கு கொடுத்ததும் அவர்தான்.
மற்ற அரசியல் கட்சிகளில் பொதுச் செயலாளர் பதவி என்பது எத்தனை வலிமையான பதவி? ஆனால் தவெகவில் புஸ்ஸி ஆனந்த் செய்த ஒரு தவறால் இப்படி கேலி கிண்டலுக்குள்ளாகிவிட்டதே என தொண்டர்கள் வேதனையில் உள்ளனர்.
புஸ்ஸி ஆனந்தை நம்பி விஜய் கட்சியை ஆரம்பித்துவிட்டாரே என சாதாரண மக்கள் கூட பேசுவதை அறிந்த விஜய், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து இந்த பதவிகளை கலைக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications