வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய்
சென்னை: மதச்சார்பற்ற கட்சிகளோடு மட்டும் தான் தவெக கூட்டணி. நம்முடைய தலைமையில் தான் ஆட்சி என்பதிலும் உறுதியாக உள்ளோம் என தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கூட்டணி குறித்து யார் என்ன வதந்தி பரப்பினாலும் அதை நம்பாதீர்கள் என விஜய் கூறியுள்ளார்.
ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் நோன்பு திறப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

இதையடுத்து, இஃப்தார் நோன்பு நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக உடன் கூட்டணி எனப் பரவிவரும் தகவல்களை மறுத்துள்ளார். சமூகநீதி, மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் கிடையாது; தவெக தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக உள்ளதாக தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
விஜய் பேசுகையில், "விஜய் இந்த கூட்டணியில் இணைகிறார் அந்த கூட்டணியில் இணைகிறார் என பொய்யான பிரச்சாரத்தை சிலர் செய்தார்கள். இந்த நியூஸ் எல்லாம் கேட்டு நீங்க கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகியிருப்பீங்க. அதனால் மறுபடியும் தெளிவா ஓபனா ஒரு விஷயத்தை சொல்றேன். நான், நாங்க எப்பவுமே மதச்சார்பற்ற சமூகநீதி என்பதில் சமரசம் வைத்துக் கொள்ளவே மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.
நம்மளோட முதல் மாநாட்டுல கூட நான் சொன்ன மாதிரி, அரசியல்ல யாருக்காகவும் எதுக்காகவும் எந்தவித சமரசமும் நாம வச்சிக்க போறதே இல்ல.. அந்த பேச்சுவார்த்தையே கிடையாது. அதனால், யார் என்ன அவதூறு பரப்பினாலும் அதை நம்பாதீங்க"" எனப் பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களாக என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக தகவல்கள் உலவி வந்த நிலையில், பாஜகவுடனோ, அதிமுகவுடனோ கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் விஜய்.












Click it and Unblock the Notifications