”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’
சென்னை: தமிழக அரசியலில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு வெற்றி தோல்வியின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகம், அடுத்த கட்டமாக தனது செல்வாக்கை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகளை கவரும் நோக்கில் கட்சி தனித்துவமான 'ஆபரேசன் அக்னி கலசம்' வியூகத்தை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தாலும், வட மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவை பெற முடியவில்லை என்பது கட்சிக்குள் நடைபெற்ற ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கணிசமான வெற்றியை பெற்ற கட்சி, வன்னியர் மக்கள் அதிகம் வசிக்கும் சில மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை. அரியலூர், விழுப்புரம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆபரேசன் அக்னி கலசம்
அதேபோல் கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் குறைந்த அளவிலான வெற்றியே கிடைத்ததாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு வட மாவட்டங்களை மையமாக வைத்து புதிய அரசியல் நடவடிக்கைகளை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வன்னியர் சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், முன்னாள் உள்ளாட்சி நிர்வாகிகள், சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் பிற கட்சிகளில் செல்வாக்கு கொண்ட நிர்வாகிகளை கட்சிக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வன்னியர் வாக்குகள்
இதற்காக வட மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தும் வகையில் கட்சி நிர்வாக அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வட மாவட்டங்களின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு தொடர்ந்து மக்கள் சந்திப்பு, நலத்திட்ட ஆய்வு, கட்சி விரிவாக்க பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.
பாமக
அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் மற்றொரு முக்கிய அம்சம், வன்னியர் சமூகத்தின் ஆதரவு தளமாக கருதப்படும் பாமக வாக்கு வங்கியை குறிவைத்து தவெக நகர்வுகளை மேற்கொள்வதாகும். வட மாவட்டங்களில் பாமக நீண்ட காலமாக வலுவான அடித்தளத்தை கொண்டிருக்கிறது. எனவே அந்த சமூகத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்களை தங்களது பக்கம் ஈர்ப்பதன் மூலம் எதிர்கால தேர்தல்களில் முன்னிலை பெற முடியும் என தவெக கணக்கிடுவதாக கூறப்படுகிறது.
தவெக
இதுவரை பாமக தலைமையை நேரடியாக விமர்சிக்கும் அரசியல் அணுகுமுறையை தவெக கையில் எடுக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. வன்னியர் சமூக வாக்காளர்களிடம் எதிர்மறையான தாக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டு, அதே நேரத்தில் கட்சியின் அமைப்பை மெதுவாக வலுப்படுத்தும் திட்டத்தில்தான் தவெக செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அடுத்த சில மாதங்களில் வட மாவட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்னியர் சமூகம்
குறிப்பாக சாலை, குடிநீர், தொழில் முதலீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்கள் மூலம் வட மாவட்ட மக்களின் ஆதரவை அதிகரிக்கும் முயற்சி நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, வட தமிழக அரசியலில் வன்னியர் சமூக வாக்குகள் எப்போதுமே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்து வருகின்றன. எனவே அந்த வாக்கு வங்கியை யார் கவர்கிறார்கள் என்பது எதிர்கால தேர்தல்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வட தமிழக அரசியல்
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே வட மாவட்டங்களில் தங்களது ஆதரவை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் தீவிர களப்பணியில் இறங்கியிருப்பது அரசியல் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை மனதில் வைத்து வட மாவட்டங்களில் நடைபெறும் இந்த அரசியல் நகர்வு, கைகொடுக்குமா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.












Click it and Unblock the Notifications