ஆத்தாடி.. கூட்டணிக்கு ரெடி ஆகிட்டாரா? அதாவலே போட்ட தூண்டில்! திருச்சியில் விஜய் தந்த கிரீன் சிக்னல்
சென்னை: "தமிழக அரசியல்ல எது வேணும்னாலும் நடக்கலாம் தம்பி..." - இதுதான் இப்போ கோட்டை வட்டாரத்தின் லேட்டஸ்ட் முணுமுணுப்பு. ஒரு பக்கம் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, "தேர்தலுக்குப் பிறகு பாஜக - அதிமுக - தவெக (TVK) கூட்டணி அமைய வாய்ப்பிருக்கு"னு ஒரு குண்டைத் தூக்கிப் போட, இன்னொரு பக்கம் திருச்சியில் விஜய் கொடுத்த ஸ்பீச், அந்த சந்தேகத்துக்கு நெய் ஊத்துற மாதிரி இருக்கு.
இந்த முறை திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு விஜய் உதிர்த்த வார்த்தைகள், தமிழக அரசியலின் திசையை மாற்றியமைக்கப் போகிறதா என்கிற விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். "தேர்தலுக்குப் பிறகு பாஜக - அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது" என்பதுதான் அந்த ஸ்டேட்மெண்ட். இதுவரை 'யாரோ சொன்னது' என்று கடந்து போனவர்கள் கூட, நேற்று விஜய்யின் பேச்சைக் கேட்டுவிட்டு "ஒருவேளை இருக்குமோ?" எனப் புருவம் உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.
கேஸ் தட்டுப்பாடு: அம்பு யாரை நோக்கி?
நேற்று திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, மாரக்கடை பகுதியில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் விஜய் பேசினார். வழக்கமாக "இரண்டு திராவிடக் கட்சிகளும் சரிசமமான எதிரிகள்" என்று பேசி வந்தவர், இந்த முறை 'இலக்கை' இன்னும் துல்லியமாக்கினார்.
தமிழகத்தில் நிலவும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டை கையில் எடுத்த விஜய், "மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிடவில்லை, அது அவர்கள் தவறு. ஆனால், இங்கே இருக்கும் 'ஸ்டாலின் சார்' என்ன செய்கிறார்?" என நேரடியாக முதலமைச்சரை நோக்கி கேள்விகளை அடுக்கினார்.
"சொந்த வீட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் டெல்லிக்கு ஓடுகிறவர், மக்களின் இந்தத் துயரத்திற்காக ஏன் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்கவில்லை? 100 ரூபாய் மானியம் தருவோம் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?" என அவர் கேட்டபோது, மைதானத்தில் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது.
பாஜகவை விட்டுப்பிடிக்கும் வியூகமா?
தேசிய அளவில் 'கேஸ் தட்டுப்பாடு' என்பது பெட்ரோலிய அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சொதப்பல்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். இதற்காக திமுகவை மட்டும் விஜய் அதிகம் விமர்சித்தது, அரசியல் நோக்கர்களை வியப்படைய வைத்துள்ளது.
"பாஜகவை பெயரளவுக்கு மட்டும் சாடிவிட்டு, திமுகவை 'கல்லாப்பெட்டி கூட்டணி' என கடுமையாகச் சாடுவதன் மூலம், அவர் பாஜக மற்றும் அதிமுக ஓட்டு வங்கியை நோக்கித் தூண்டில் போடுகிறாரோ?" என்கிற கேள்வி எழாமல் இல்லை. குறிப்பாக, "திமுகவும் பாஜகவும் மக்களுக்கு ஒன்றுதான், இருவரையும் நிராகரிக்க வேண்டும்" என்று அவர் சொன்னாலும், அவரது விமர்சனக் கணைகள் 80 சதவீதம் அறிவாலயத்தை நோக்கியே உள்ளன.
அடுத்தது என்ன?
அதிமுக - பாஜக கூட்டணி ஒரு பக்கம், திமுக கூட்டணி மறுபக்கம் என களம் சூடாகியிருக்கும் நிலையில், விஜய்யின் இந்த 'ட்ராக் மாற்றம்' புதிய சமன்பாடுகளை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது. "பாஜகவுடன் கூட்டணி இல்லை" என இதுவரை திட்டவட்டமாகச் சொல்லிவரும் விஜய், தனது பேச்சின் மூலம் 'பாஜகவுக்கு சாதகமான சூழலை' உருவாக்குகிறாரா அல்லது திமுக எதிர்ப்பு ஓட்டுகளை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் இழுக்க முயல்கிறாரா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications